
மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான வான்வழி இணைப்பை வலுப்படுத்தும் வகையிலும், தனது நீண்டதூர விமான சேவை விரிவாக்கத்தின் மற்றொரு மைல்கல்லாகவும், கோலாலம்பூர் மற்றும் சிட்னி இடையே தனது முதலாவது நேரடி ஏர்பஸ் A330 சேவையை பாத்தேக் ஏர் நேற்று தொடங்கியது. இந்தத் தொடக்க விழாவைக் கொண்டாடும் வகையில் கோலாலம்பூர் மற்றும் சிட்னியில் நேற்று முன்தினம் தொடக்க விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட தொடக்க கால விமானம் சிட்னி விமான நிலையத்தை வந்தடைந்தபோது, அதற்கு பாரம்பரிய நீர் வணக்கம் (water salute) செலுத்தி முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இது இவ்விரு நகரங்களுக்கும் இடையிலான பாத்தேக் ஏர் நிறுவனத்தின் புதிய இடைநில்லா விமானச் சேவையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இதன் மறுபிரயாணத்தைக் கொண்டாடும் விதமாக, பாடிக் ஏர் நிறுவனம் சிட்னி விமான நிலையம் மற்றும் மலேசிய சுற்றுலாத்துறை (சிட்னி) ஆகியவற்றுடன் இணைந்து, விமான நிலையப் பதிவு முகப்பில் (Check-in Counter) ஒரு எளிய விடைபெறும் விழாவை நடத்தியது. அதில், சிட்னியிலிருந்து கோலாலம்பூர் நோக்கிய தொடக்க கால விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு நினைவுப் பரிசுப் பைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிட்னி மலேசிய சுற்றுலாத்துறையின் இயக்குநர் திருமதி. ஜமிலா பின்தி அப்துல் ஹலிம் அவர்கள் கலந்து கொண்டார்.

அதே நேரத்தில், கோலாலம்பூரில், சிட்னியிலிருந்து இயக்கப்பட்ட முதலாவது நேரடி விமானச் சேவைக்கு, ‘மலேசியாவிற்கு வருகை தாரீர் 2026’ (VM2026) பிரச்சாரத்தின் சின்னங்களான வீரா மற்றும் மன்ஜாவின் கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வைச் சிறப்பிப்பதற்காக மலேசிய சுற்றுலாத்துறையின் துணை இயக்குநர் ஜெனரல் (விளம்பரம்) டத்தோ மூசா பின் யூசோப், மற்றும் மலேசிய சுற்றுலாத்துறை, மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மலேசியாவின் புகழ்பெற்ற விருந்தோம்பலையும், VM2026 பிரச்சாரத்திற்கான ஆதரவையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த மலேசிய சுற்றுலாத்துறையின் வரவேற்பு நிகழ்ச்சிகளுடன் இந்த வருகை விழா நிறைவுற்றது.
இந்த புதிய இடைநில்லா (நான்-ஸ்டாப்) விமானச் சேவை, பாலினோசியா (பாலி) வழியாக இயக்கப்படும் பாத்தேக் ஏர்
நிறுவனத்தின் தற்போதைய கோலாலம்பூர்-சிட்னி சேவையை மேலும் வலுப்படுத்துகிறது. இது பயணிகளுக்கு கூடுதல் தேர்வுகள், அதிக இடவசதி மற்றும் விமான கால அட்டவணையில் கூடுதல் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அகல-பாதை (wide-body) ஏர்பஸ் A330 விமானங்கள் மூலம் வழங்குகிறது. மிக முக்கியமாக, இது தற்போது நடைபெற்று வரும் விஎம்2026 (VM2026) பிரச்சாரத்திற்கு ஏற்ப வான்வழி இணைப்பை மேம்படுத்த உதவுகிறது.
விசிட் மலேசியா 2026 (VM2026) காரணமாக அதிகரித்து வரும் பயணத் தேவைகளுக்கு மத்தியில் இந்தத் தொடக்கம் அமைந்துள்ளது. மலேசியாவிற்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை வழங்கும் முக்கிய தூரதேச நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா தொடர்ந்து நீடிக்கிறது. மலேசிய சுற்றுலாத் துறையின் (Tourism Malaysia) தரவுகளின்படி, 2026 மே மாத நிலவரப்படி, அந்நாடு 213,378 ஆஸ்திரேலியப் பார்வையாளர்களை வரவேற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7.2 சதவீத வளர்ச்சியாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழிப் போக்குவரத்து விரிவாக்கத்தின் ஆதரவோடு, பொழுதுபோக்கு, கல்வி மற்றும் நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்ப்பதற்கான (VFR) பயணங்கள் ஆகியவற்றில் உள்ள வலுவான தேவையை இந்தத் தொடர்ச்சியான வளர்ச்சி பிரதிபலிக்கிறது.

மலேசியப் பயணிகளுக்கு சிட்னி தொடர்ந்து மிக முக்கியமான ஆஸ்திரேலிய நுழைவாயில்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதற்கு இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நெருக்கமான கல்வி, வணிகம் மற்றும் சுற்றுலாத் தொடர்புகள் முக்கியக் காரணமாகும். அதே நேரத்தில், கோலாலம்பூர் ஒரு உன்னதமான பிராந்திய மையமாகச் செயல்படுகிறது. இது பினாங்க், லங்காவி, கோத்தா கினபாலு, பாங்காக், டோக்கியோ மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியா மற்றும் அதற்கு அப்பாலுள்ள
பாத்தேக் ஏர் நிறுவனத்தின் பரந்த நெட்வொர்க்கிற்கு தடையற்ற தொடர் விமான இணைப்புகளை வழங்குகிறது.
பாத்தேக் ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறுகையில், சிட்னிக்கான இந்த நேரடி சேவை அறிமுகமானது, ஆஸ்திரேலிய சந்தையில் தங்களின் விமான நிறுவனம் தொடர்ந்து விரிவடைவதில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது என்றார்.
“இந்த புதிய நேரடி சேவையின் தொடக்கம், எங்களது தற்போதைய சிட்னி செயல்பாடுகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மேம்பாட்டைக் குறிக்கிறது. பாலி வழியாக இயக்கப்படும் எங்களது தற்போதைய கோலாலம்பூர்-சிட்னி சேவைக்கு துணையாக ஒரு நேரடித் தெரிவையும் வழங்குவதன் மூலம், ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா இடையே பயணிக்கும் பயணிகளுக்கு அதிக வசதி, மேம்பட்ட இணைப்பு மற்றும் கூடுதல் நெகிழ்வுத்தன்மையை பாத்தேக் ஏர்
நிறுவனத்தால் வழங்க முடிகிறது.”
“சுற்றுலா, கல்வி மற்றும் வணிகப் பயணப் பிரிவுகளில் ஊக்கமளிக்கும் வளர்ச்சித் தேவையை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். இந்த கூடுதல் சேவையானது, பிராந்திய அணுகலை வலுப்படுத்துவதோடு, தடையற்ற பயண அனுபவத்தை வழங்குவதிலும் பாத்தேக் ஏர்
கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. சிட்னியிலிருந்து வரும் பயணிகள் பிராந்தியத்தின் பரந்த அளவிலான இடங்களுக்கு எளிதாகத் தொடர்புகொள்வதற்கு ஏதுவாக, கோலாலம்பூர் தொடர்ந்து தென்கிழக்கு ஆசியாவிற்கான ஒரு முக்கிய நுழைவாயிலாகத் திகழ்கிறது.”
மலேசிய சுற்றுலாத்துறையின் தலைமை இயக்குநர் திரு. முகமது அமிருல் ரிசால் பின் அப்துல் ரகீம் கூறும்போது, “சிட்னி மற்றும் கோலாலம்பூர் இடையேயான இந்த நேரடி விமானச் சேவை அறிமுகம், ஆஸ்திரேலிய சந்தையில் இருக்கும் பலத்த தேவையைப் பிரதிபலிக்கிறது. மேலும், ஆஸ்திரேலியப் பயணிகளிடையே மலேசியா ஒரு விருப்பமான இடமாக இருப்பதை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட போக்குவரத்துத் தொடர்பு, VM2026 திட்டத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளுக்கு மேலும் பக்கபலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
இந்த புதிய வழித்தடம், மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான தொடர்பை வலுப்படுத்துவதன் மூலமும், உள்வரும் சுற்றுலா வளர்ச்சியை ஆதரிப்பதன் மூலமும், இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான பொருளாதார, வணிக மற்றும் கலாச்சார உறவுகளை வளர்ப்பதன் மூலமும் VM2026-ன் கீழ் மலேசியாவின் விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலா நோக்கங்களை மேலும் வலுப்படுத்துகிறது.


