
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி அபார வெற்றி பெற்றால் தாம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜசெகவை சேர்ந்த வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தின் போது விடுத்துள்ள சவால் அவருக்கு பாதகமாக முடிந்து விட்டதாக மலேசிய மறுவாழ்வு சங்கத்தின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அழகேசு கூறினார்.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்து முடிந்த ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் 56 தொகுதிகளில் 48 தொகுதிகளை கைப்பற்றி தேசிய முன்னணி சாதனை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக ங்கா கோர் மிங் முடித்துள்ள சவாலின் படி அதனை நிரூபிக்க வேண்டும் என அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் அக்மால் சாலே வலியுறுத்தியுள்ளார்.
ங்காவிற்கு ராஜினாமா கடிதத்தை தயார் செய்து தரவும் தாம் தயார் என அக்மால் கூறியிருப்பது அந்த அமைச்சருக்கு மரியாதை குறைவான ஒன்று என்று தான் கூற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
ஆகையால் இது போன்ற பொறுப்பற்ற சவால்கள் விடுவதை நிறுத்திக் கொண்டு ஒற்றுமை அரசாங்கத்தில் தமக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியமான அமைச்சர் பதவியின் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே ங்கா கோர் மிங் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி அபார வெற்றி பெற்று ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் அபிஸ் கஸாலி மீண்டும் மந்திரி பெசாராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
இந்த தேர்தலில் குறிப்பாக மஇகா 100 விழுக்காடு வெற்றி பெற்றுள்ளது ஒரு சாதனை என்று தான் கூற வேண்டும்.
கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் தலைமையிலான மஇகா பெர்லிங்,காஹாங்,
கெமெலா மற்றும் புக்கிட் பாத்து ஆகிய தொகுதிகளில் பெற்றுள்ள வெற்றி இந்திய சமூகத்தினர் மீண்டும் அந்த கட்சியின் மீது நம்பிக்கை வைக்க தொடங்கி விட்டனர் என்பதை காட்டுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நிலையில் பாக்காத்தான் ஹராப்பான் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை சரிவு கண்டு வருவதாக ஜொகூர் மாநில தேர்தலின் முடிவு காட்டுகிறது என்பது தான் உண்மை.
ஆகையால் எதிர் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் மட்டுமே பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கவனம் செலுத்த வேண்டும்.
பாக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் இந்த தேர்தலில் சவால்கள் விடுவதை நிறுத்திவிட்டு நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தை தற்காத்துக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


