
சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் தொடர்ந்து நன்மை பயக்கும் சேவைகளும் தியாகங்களுமே ஒரு தலைவரின் பெருமையை நிர்ணயிக்கின்றன என்றும், இந்தியச் சமூகத்தின் நலன், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக அடித்தளமிட்ட அரசியல் தலைவர்களில் துன் வீ.தி. சம்பந்தன் முக்கியமானவர் என்றும் தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.
துன் வீ.தி. சம்பந்தனின் 107-ஆவது நினைவு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அவர் இவ்வாறு உரையாற்றினார்.
துன் வீ.தி சம்பந்தன் விட்டுச் சென்ற தலைமைத்துவம், ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பு மிக்க சேவை மனப்பான்மை, குறிப்பாக இளைய தலைமுறைக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தேசிய தலைவர்களின் சேவைகளை நினைவுகூருவது வரலாற்றை மீட்டுப் பார்ப்பது மட்டுமல்ல; ஒற்றுமை, அனைவரையும் உள்ளடக்கிய சமூகம் மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட நாட்டை உருவாக்கும் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பை நினைவூட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
துன் வீ.தி. சம்பந்தனின் பங்களிப்புகளை இன்றைய மற்றும் எதிர்கால தலைமுறையினர் தொடர்ந்து நினைவுகூரும் வகையில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் துன் சம்பந்தன் சமூக நல மன்றத்திற்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
ஒரு தலைவரின் மரபு அவரது மறைவுடன் முடிவடைவதில்லை என்றும், அவர் விட்டுச் சென்ற விழுமியங்கள், போராட்டங்கள் மற்றும் உத்வேகம் மக்கள் மற்றும் நாட்டின் வழியே தொடர்ந்து வாழ்கின்றன என்றும் யுனேஸ்வரன் தெரிவித்தார்.


