
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) புதிய தலைமை ஆணையருக்கு அனைத்து அதிகாரிகளும் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என்று டான் ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
மே 12ஆம் தேதி தனது பதவிக்காலத்தை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்த அவர், புதிய தலைமையை முழுமையாக ஆதரிப்பதே அமைப்பின் வலிமை மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கியம் என்று வலியுறுத்தினார்.
“புதிய தலைமையுடன் அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்றால், அது அமைப்பையே பாதிக்கும் செயலாகும். எந்த அமைப்பாக இருந்தாலும், நாம் தலைமையிடம் விசுவாசமாக இருக்க வேண்டும்,” என்று MACC தலைமையகத்தில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் கூறினார்.
தனது சேவை காலத்தை நினைவுகூர்ந்த அசாம் பாக்கி, யார் தலைமை ஏற்றாலும் அதிகாரிகள் மக்களுக்கும் நாட்டிற்கும் சேவை செய்வதே முக்கிய கடமை என்றும் குறிப்பிட்டார்.
“நாம் அனைவரும் மக்களுக்கும் நாட்டிற்கும் சேவை செய்யும் அதிகாரிகளாகவே தொடர்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.


