
டில்லியில் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், 92, உடல்நலக் குறைவால், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார். காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், 2004 முதல் 2014 வரை மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தார்.
மன்மோகன் சிங் மறைவிற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி., ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட மன்மோகன் சிங் உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இறுதிச் சடங்குகள் நாளை (டிச.28) நடைபெறும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
இந்நிலையில், டில்லியில் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். மத்திய உள்துறை அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
மன் மோகன் சிங் உடலுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, காங்கிரஸ் எம்.பி.,க்கள் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.


