
கிளாந்தான் மாநிலத்தில் உள்ள கோலா கிராய், பாசீர் பாஞ்சாங் தமிழ் பள்ளிக்கு 2 பேருந்துகளை வழங்க மலேசிய இந்திய உருமாற்ற பிரிவான(மித்ரா) முன் வர வேண்டும் என மலேசிய பயனீடாளர் நீதி இயக்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் எஸ்பி பிரேம் வலியுறுத்தினார்.
இந்தப் பள்ளியில் பயிலும் நமது இந்திய மாணவர்கள் சுமார் 50 கிலோமீட்டர் கடந்து இந்த பள்ளிக்கு தினமும் வந்து செல்வதாக அவர் சுட்டிக் காட்டினார்.
அப்படியானால் இந்த இந்திய மாணவர்கள் கல்வி கற்க தினமும் 100 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த விவகாரம் குறித்து பாசீர் பாஞ்சாங் தமிழ் பள்ளியின் தலைமை ஆசிரியர் கண்ணன் மூலம் தமக்கு தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
கல்வி கற்க இந்த இளம் மாணவர்கள் தினமும் 100 கிலோ மீட்டர் பயணம் செய்வது வேதனையை தருவதாக அவர் சொன்னார்.
இந்த விவகாரத்தில் மலேசிய இந்தியர்களின் உருமாற்றப் பிரிவான மித்ரா என்ன செய்து கொண்டிருக்கிறது என அவர் கேள்வி எழுப்பினார்?
இந்து கோயில்களுக்கு லட்சக்கான பணத்தை வழங்கி வரும் மித்ரா, தமிழ் பள்ளி மாணவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கவில்லையா என அவர் வினவினார்.
இந்நாட்டிலுள்ள இந்திய மாணவர்களின் அடிப்படையே தமிழ் பள்ளிகள் தான் என்பதை மித்ரா மறந்துவிட்டது என அவர் சாடினார்.
மித்ராவிற்கு அரசாங்கம் ஆண்டுதோறும் பல லட்சங்களை வழங்கி வருகிறது.
ஆனால் தமிழ் பள்ளிகளின் வளர்ச்சியில் மித்ரா அலட்சிய போக்கை காட்டி வருகிறது என அவர் குறிப்பிட்டார்.
இதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த பாசீர் பாஞ்சாங் தமிழ் பள்ளியாகும் என்றார் அவர்.
மித்ராவிற்கு பொறுப்பேற்றிருக்கும் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உடனடி கவனத்தை செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


