
செப்பாங் நவ 16
கிழக்கு ஆப்பிரிக்காவின் கென்யா தலைநகரான நைரொபிக்கு ஏர் ஆசியா எக்ஸ் தனது முதலாவது விமான சேவையை வெற்றிகரமாக கொண்டாடியது.
நேற்று மாலை 7.00 மணிக்கு கேஎல்ஐஏ2 அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட D 7 101 விமான பயணிகளை துணை போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஹாஸ்பி ஹாபிபோல்லா, மலேசியாவிற்கான கென்யா தூதர் எக்கிதெல்லா மொரு, கேப்பிட்டல் ஏ தலைவர் டத்தோ கமாருடின் மெரானுன், ஏர் ஆசியா எக்ஸ் தலைவர் டத்தோ ஃபாம் லீ மற்றும் ஏர் ஆசியா எக்ஸ் தலைமை செயல்முறை அதிகாரி பென்யாமின் இஸ்மாயில் அன்புடன் வழி அனுப்பி வைத்தனர்.
சுமார் 90 விழுக்காடு அளவிலான பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம் நேற்று இரவு 11 மணிக்கு (கென்யா நேரப்படி) ஜோமொ கென்யாத்தா அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்தது.

ஜோமொ கென்யாத்தா அனைத்துலக விமான நிலையத்தில் கென்யா பாரம்பரிய நடனங்களுடன் இந்த பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஏர் ஆசியாவின் இந்த முதல் விமான சேவையை கொண்டாடும் வகையில் விமான நிலையத்தில் அனிச்சல் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மலேசியாவிற்கான கென்யா தூதர், டத்தோ கமாருடின் மெரானுன்,பென்யாமின் இஸ்மாயில், மலேசிய தூதரக அதிகாரிகள், ஊடகவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கேஎல்ஐஏ2 விமான நிலையத்தில் பேசிய துணை போக்குவரத்து அமைச்சர் டத்தோ டத்தோ ஹாஸ்பி, இந்த புதிய விமான சேவை மலேசியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கு இடையே வர்த்தகம், சுற்றுலா மற்றும் பொருளாதாரத் துறையை மேலும் வலுப்படுத்தும் என குறிப்பிட்டார்.
ஆப்பிரிக்கா கண்டத்தில் முதல் முறையாக கால் பதித்து, ஏர் ஆசியா ஒரு சாதனையை படைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஆசியா மற்றும் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் கென்யாவிற்கு நேரடி விமான சேவையை மேற்கொள்வது, ஒரு சகாப்தம் என்று தான் கூற வேண்டும் என சொன்னார்.


