
கோலாலம்பூர் ஜூலை 28
‘சீனர்களுக்கு சீனா, இந்தியர்களுக்கு இந்தியா’ ஆனால் மலாய்க்காரர்களுக்கு ‘தானா மெலாயு மட்டுமே’ என இனவாதமாக பேசிய பாஸ் கட்சியின் முகமட் சானுசி, தாம் அப்படி கூறவில்லை என இப்போது பல்டியடித்துள்ளதாக மலேசிய மக்கள் மறுவாழ்வு சங்கத்தின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அழகேசு கூறினார்.
இந்நாட்டிலுள்ள இந்திய மற்றும் சீன சமூகங்களை இழிவு படுத்தும் சானுசியின் இனவாத பேச்சு சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
இந்த இனவாத தலைவரின் உரை குறித்து இவருக்கு எதிராக பல போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ‘நான் அப்படி பேசவில்லை, எனது உரையை திரித்துக் கூறிவிட்டனர்’ என சானுசியின் விளக்கம் சிறுபிள்ளைத் தனமாக உள்ளது.
‘இந்நாட்டு பிரஜைகள் என்ற நிலையில் சீன மற்றும் இந்திய சமூகங்களுக்கு உரிமை உண்டு என்று தான் கூறினேன்’ என்ற சானுசியின் விளக்கம் வேடிக்கையாக இருக்கிறது.
இந்த விவகாரத்தில் சானுசி மீது போலீஸ் உடனடி விசாரணை நடத்த வேண்டும். இந்த இனவாத தலைவரின் உரையை போலீசார் செவி மடுத்து உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்நாட்டின் வரலாற்றை தெரியாத ஒரு இனவாத தலைவர் ஒரு மாநிலத்தை எப்படி வழி நடத்துகிறார்? என அவர் கேள்வி எழுப்பினார்.
சானுசியின் விவகாரத்தில் உடனடியாக தமது ஆட்சேபத்தை
வெளிப்படுத்திய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரனுக்கு உண்மையிலே பாராட்டுகளை தாம் தெரிவிப்பதாக அவர் சொன்னார்.
காரணம் சானுசியின் உரை திரித்து கூறப்பட்டுள்ளது என தேசிய முன்னணியின் மற்றொரு பங்காளி கட்சியான மசீச கட்சியின் தலைவர் வீ கா சியோங் அறிக்கை கேவலமாக இருக்கிறது என அவர் சொன்னார்.
தமது சொந்த அரசியல் லாபத்திற்காக தான் கா சியோங் இப்படி பேசுகிறா? என்ற கேள்வி எழுந்துள்ளதாக டத்தோஸ்ரீ அழகேசு வினவினார்.


