
அமானா இக்தியாரின் பெண் திட்டம்
இந்திய பெண்களின் உருமாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
இந்திய பெண் தொழில்முனைவோரின் உயர்வுக்கும், உருமாற்றத்திற்கும், ஒளிமயமான எதிர்காலத்திற்கும் வித்திடும் வகையில், அமானா இக்தியார் மலேசியா நிதியகத்தின் கீழ் பெண் எனும் புதுமை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் 50 மில்லியன் ரிங்கிட் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.
இக்கூடுதல் நிதியானது மலேசியா மடானி கொள்கைக்கு ஏற்ப, பெண் (வளப்பம், ஆளுமை, புதிய வழமை) எனும் புதிய திட்டத்தின் வழி வியாபாரக் கடனுதவியாக பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதன் வழி, இந்திய பெண் தொழில்முனைவோரை அடுத்த கட்ட வளர்ச்சிப் பாதைக்கு முன்னேற்ற முடியும்.
அவர்களின் சுய முன்னேற்றத்திற்கு வழிகோழும் இன்னொரு புதுமை முயற்சியாக இது அமைந்திருந்தது.
பெண் திட்டத்தின் கீழ் இவ்வாண்டு ஆயிரக்கணக்கான இந்திய பெண்கள் பயனடைந்தனர்.
மேலும் இந்த 50 மில்லியன் ரிங்கிட்டில் 22 மில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய பணமும் இவ்வாண்டும் இறுதிக்குள் முடிந்து விடும்.
மேலும் இந்திட்டத்தின் வாயிலாக கடனுதவி பெற்றவர்களை அதை முறையாக செலுத்தி வருகின்றனர்.
குறிப்பாக 99.9% பேர் அக்கடனை முறையாக செலுத்தியுள்ளனர். இது இத்திட்டத்தின் வெற்றியாகும்.
குறிப்பாக இந்திய பெண்கள் வர்த்தகத்தில் சாதிக்கவும் இது பெரும் உதவியாக உள்ளது.
பங்சாரில் நடைபெற்ற பெண் திட்டத்தின் காசோலை வழங்கும் நிகழ்வில் பேசிய டத்தோஸ்ரீ ரமணன் இதனை கூறினார்.
இந்நிகழ்வில் அமானா இக்தியாரின் தலைமை இயக்குநர் டத்தோ ஷாமிர், துணையமைச்சரின் முதன்மை அரசியல் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன், மைக்க் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன், மகளிர் பிரிவுத் தலைவர் ஹேமலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


