
உள்ளூர் ஊடக நிறுவனங்கள் ரி.ம 30 மில்லியன் மதிப்பிலான தொடர்பு அமைச்சின் ஊடக புத்தாக்க நிதிக்கான ஐந்தாம் கட்ட விண்ணப்பங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஊக்குவிக்கப்படுகின்றன.
ஐந்தாம் கட்ட விண்ணப்பங்கள் மே 1 தொடங்கி 14 ஆம் தேதி வரை திறந்திருக்கும் நிலையில், ஒவ்வொரு ஊடக நிறுவனமும் அதிகபட்சமாக ரி.ம 300,000 வரை விண்ணப்பிக்கலாம் என தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
இதுவரை மொத்தம் ரி.ம 20.14 மில்லியன் அங்கிகரிக்கப்பட்டுள்ளதாகவும், 60 ஊடக நிறுவனங்கள் அதில் பயனடைந்திருப்பதை துணையமைச்சர் சுட்டிக்காட்டினார். மீதமுள்ள ரி.ம 9.86 மில்லியன் ஒதுக்கீடு அடுத்த கட்டங்களில் பயன்படுத்தப்படும் என்றார்.
ஊடகத் துறையில் பயிற்சி, தொழில்நுட்ப பயன்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, உள்ளடக்க உருவாக்கம் மற்றும் ஆராய்ச்சி, மேம்பாட்டு நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக இந்த முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டதாக கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ குறிப்பிட்டார்.

“முதல் கட்டத்தில் 34 ஊடக நிறுவனங்கள் ரி.ம 12.38 மில்லியன் அங்கிகரிப்பைப் பெற்றள்ளன. இன்று (மே 7) இரண்டாம் கட்டத்தில் 16 ஊடக நிறுவனங்கள் ரி.ம 5.16 மில்லியன், மூன்றாம் கட்டத்தில் 10 நிறுவனங்களுக்கு ரி.ம 2.6 மில்லியன் அங்கிகரிக்கப்பட்டு அதற்கான ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டன.” என்றார்.
மேலும், ஏப்ரல் 14 ஆம் தேதி நிறைவடைந்த நான்காம் கட்டத்தில் பெறப்பட்ட 10 விண்ணப்பங்களில், ஏழு விண்ணப்பங்கள் தகுதி பெற்று தற்போது மதிப்பீட்டில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
“மலேசிய தகவல் துறையில் பதிவு செய்துள்ள ஊடக நிறுவனங்கள் தங்களது திறன்களை வலுப்படுத்தவும், போட்டித்திறனை உயர்த்தவும், வேகமாக மாறிவரும் ஊடக சூழலில் புதிய அணுகுமுறைகளை ஆராயவும் இந்த நிதிக்கு விரைவாக விண்ணப்பிக்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டர்.
முன்னதாக, தலைநகரில் நடைபெற்ற தேசிய பத்திரிகையாளர் தின (ஹவானா) ஊடக மன்ற தொடக்க விழாவில் கலந்து சிறப்பித்து, உரையாற்றுகையில் தியோ இவ்வாறு கூறினார்.
“நேர்மையான ஊடகம் – நம்பகத்தன்மையின் அடித்தளம்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.


