
வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் (PRN), லெடாங் நாடாளுமன்றத்தின் கீழ் உள்ள N09 கம்பிர், N10 தங்காக் மற்றும் N11 செரம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளையும் பாரிசான் நேஷனல் (BN) மீண்டும் கைப்பற்றும் என்ற முழு நம்பிக்கை உள்ளதாக பிபிபி தேசிய தகவல் தொடர்புத் தலைவர் ஜெயரத்னம் மணியம் @ அஜாய் தெரிவித்தார்.
இன்று தங்காக்கில் நடைபெற்ற பிஎன் தேர்தல் இயந்திர அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், லெடாங் மக்களிடையே முன்னேற்றம், நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்காக பிஎன் மீது மீண்டும் நம்பிக்கை அதிகரித்து வருவதாகக் கூறினார்.
“லெடாங் மக்கள் தங்களின் நலனையும், வளர்ச்சியையும் முன்னெடுக்கும் பிஎன் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஜொகூர் மாநிலத் தேர்தலில் தங்காக் தொகுதியை வெறும் 372 வாக்குகள் வித்தியாசத்தில் பிஎன் இழந்ததை சுட்டிக்காட்டிய அஜாய், இம்முறை அந்தத் தொகுதியை மீண்டும் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
“வாக்காளர்களுடனான எங்களின் சந்திப்புகளும், அடிமட்ட மக்களின் மனநிலையும், தங்காக் மீண்டும் பிஎன் வசமாகும் என்பதை காட்டுகின்றன.

அதேபோல் கம்பிர் மற்றும் செரம் தொகுதிகளிலும் வலுவான ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்,” என்றார்.
லெடாங் மக்களை நீண்டகாலமாக பாதித்து வரும் வெள்ளப் பிரச்சினைகள், உட்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் பல்வேறு உள்ளூர் சிக்கல்களை பிஎன் நன்கு அறிந்துள்ளதாக அவர் கூறினார்.
“மக்கள் பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். அனுபவமும் திறமையும் நிரூபிக்கப்பட்ட செயல்திறனும் கொண்ட அரசாங்கம் அவர்களுக்கு தேவை. மக்கள் ஆணை வழங்கினால் அந்தப் பொறுப்பை ஏற்க பிஎன் தயாராக உள்ளது,” என்றார்.
அம்னோ, ம.சீ.ச, ம.சீ.ச, பிபிபி மற்றும் பிஎன்-ஐ ஆதரிக்கும் கட்சிகள் ஆகிய பிஎன் கூறுக் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமையும் ஒத்துழைப்பும் தேர்தல் இயந்திரத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புடன் செயல்படும் அனைத்து பிஎன் கூறுக் கட்சிகளின் ஒத்துழைப்பால் வெற்றி நிச்சயம். லெடாங் மக்களின் முதல் தேர்வாக பிஎன் மீண்டும் உருவெடுக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.


