
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மக்கோத்தா இடைத்தேர்தலின் போது கசப்பான எதிரியாக இருந்து பங்காளியாக மாறிய தேசிய முன்னணிக்கு பிரச்சாரம் செய்தபோது, அந்நேரத்தில் அக்கட்சியின் கொடியை அசைத்த போது ஒரு வித்தியாசமான சூழ்நிலை தமக்கு ஏற்பட்டதாக ஜொகூர் ஜசெக தலைவர் தியோ நீ சிங் கூறினார்.
அந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி தேர்தல் இயந்திரம் தொடக்க விழாவிற்கு ஜசெகவை பிரதிநிதித்து தாம் கலந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாக தொடர்பு துறை துணையமைச்சருமான அவர் சொன்னார்.
‘அப்போது தேசிய முன்னணி பிரதிநிதிகள் என்னை அழைத்த போது, மேடைக்குச் சென்று தராசு சின்ன அக்கட்சியின் கொடியை நான் அசைத்தேன்’ என அவர் நினைவு கூறினார்.
‘அதை நான் ஏன் செய்தேன், காரணம் அந்தக் கூட்டணியின் நேர்மையான பங்காளி என்று நினைத்து தான்’ என்றார் அவர்.
நேற்று இரவு இங்கு எதிர் வரும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் வேட்பாளர்களை அறிவிக்கும் நிகழ்ச்சியில் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
ஜொகூரில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்காத போதிலும், அப்போது அந்தக் கூட்டணிக்கு தாங்கள் முழுமூச்சாக பிரச்சாரம் செய்ததாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஒற்றுமை அரசாங்கம் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மக்கோத்தா இடைத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு தாங்கள் முழுமையான ஆதரவை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
ஜசெகவுடன் ஒரே மேஜையில் அமர்வதை விட, மந்திரி பெசார் பதவி வகிக்காமல் இருப்பதை தாம் விரும்புவதாக டத்தோ ஒன் ஹபிஸ் கஸாலி அறிக்கை குறித்து அவர் கருத்துரைத்தார்.
தேசிய முன்னணி மற்றும் பாக்காத்தான் ஹராப்பானின் பங்காளி கட்சியான ஜசெக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகித்து வருகின்றனர்.


