
அண்மையில் ரவாங்கில் ஒரு இந்து கோயில் பொறுப்பற்ற நபர்களால் உடைக்கப்பட்டது சட்ட விரோதமான செயல் என கெராக்கான் கட்சியின் உதவி தலைவர் டத்தோ கா. பரமேஸ்வரன் சாடினார்.
அனுமதியின்றி அந்த கோயிலை உடைத்த சந்தேகத்திற்குரிய 4 நபர்களுக்கு எதிராக போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதுபோன்ற அநாகரீகமான செயல் தேவையற்ற சமய மற்றும் இன பதற்றத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த விவகாரத்தை அரசாங்கம் கடுமையாக கருதி சம்பந்தப்பட்ட நபர்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என்றார் அவர்.
பல இனங்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் இந்நாட்டில், இது போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என அவர் நினைவுறுத்தினார்.
அண்மைய காலமாக ‘கோயில் ஹராம்’ என்ற தீய பிரச்சாரம் நாட்டில் தலை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
முதலாவதாக ‘கோயில் ஹராம்’ என்ற வார்த்தையை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கோயில்களுக்கு என்ன தீர்வு என்பதை அரசாங்கம் பரிசிலிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.


