
‘சட்டவிரோத கோயில்கள்’ எதிர்ப்பு பேரணியை நடத்த திட்டமிட்டிருந்த சர்ச்சைக்குரிய சுயேச்சை மத போதகர் ஷம்ரி வினோத்திற்கு போலீஸ் தடுப்பு காவலில் ‘சிறப்பு கவனிப்பு’ வழங்கப்படுவது ஏன் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதி ராவ் கேள்வி எழுப்பினார்.
இந்து சமயத்தை இழிவு படுத்தி வரும் ஷம்ரி வினோத் போலீஸ் உத்தரவை மீறி கடந்த சனிக்கிழமை சட்டவிரோத பேரணியை நடத்த முயற்சித்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தலைநகர் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட ஷம்ரி வினோத்திற்கு ‘சிறப்பு கவனிப்பு’வழங்கப்படுவது ஏன் என்பது குறித்து விளக்கம் தரும்படி நேற்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் சைபுடின் நாசுத்தியோனிடம் அவர் கேள்வி எழுப்பினார்.
அந்த சர்ச்சைக்குரிய சுயேச்சை மதப் போவதற்கு உணவு பரிமாறப்படும் புகைப்படம் வைரலாகி உள்ளது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
கடந்த காலத்தில் தாம் போலீஸ் தடுப்பு கவலையில் தடுத்து வைத்த போது இப்படியொரு சிறப்பு கவனிப்பு வழங்கப்படவில்லை என கணபதி ராவ் குறிப்பிட்டார்.
இந்த சூழ்நிலையை இரண்டு விதமாக நாம் எடுத்துக் கொள்ளலாம் என சைபுடின் பதில் அளித்தார்.
இந்த படத்தைப் பார்க்கும் சிலர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவும் குடிநீரும் வழங்கப்படுகிறது ஆகையால் போலீசார் கடுமையாக நடந்து கொள்ளவில்லை என்று எடுத்து கொள்ளலாம்.
இன்னும் சிலர் தடுப்புக்காவில் உள்ளவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது என்று கருத கூடும் என அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகையால் சூழ்நிலையை நாம் எப்படி பார்க்கிறோம் என்பது தான் முக்கியமாகும் என்றார் அவர்.
கடந்த சனிக்கிழமை சட்ட விரோத பேரணியை நடத்த முயற்சித்த ஷம்ரி வினோத் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே ஷம்ரி வினோத் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவாரா என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்எஸ் ராயர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இது குறித்து தமக்கு போதுமான தகவல் இன்னும் கிடைக்கவில்லை என உள்துறை அமைச்சர் பதிலளித்தார்.


