
நாட்டில் முறையான பதிவு இல்லாத இந்து கோயில்களை ‘கோயில் ஹராம்’ என முத்திரை குத்தி வரும் சில இனவாதிகளுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேசிய பயனீட்டாளர் நீதி இயக்கம் வலியுறுத்தியது.
இந்துக்களின் மனதை புண்படுத்தி வரும் இந்த தரப்பினர், பொறுப்பற்ற தனமாக நடந்து கொள்வதாக மலேசிய பயனீட்டாளர் நீதி இயக்கத்தின் தலைவர் டாக்டர் எஸ்பி பிரேம் கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் நாட்டில் பல இன மக்களுக்கு இடையே இருந்து வரும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
ஆனால் அதே வேளையில் இந்த பொறுப்பற்ற தரப்பினர் தேசிய ஒற்றுமைக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்நாட்டில் உள்ள தமிழ் பள்ளிகள் மற்றும் கோயில்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தின் போதே இருந்தவை.
நாட்டின் சுதந்திரத்தின் போது இந்திய சமூகத்திற்கு இவை அனைத்தும் விட்டுச் செல்லப்பட்டன.
காலம் காலமாக இருந்து வரும் இந்த வழிபாட்டு தலங்களை சில இனவாதிகள் இப்பொழுது ‘கோயில் ஹராம்’ என முத்திரை குத்தி வருவது மனவேதனை அளிப்பதாக அவர் சொன்னார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த பொறுப்பற்ற இனவாதிகள் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சட்டவிரோத கோயில்களை இடித்து தள்ள மண்வாரி இயந்திரத்தை தாம் வாங்க போவதாக முகநூலில் இனவாதி ஒருவர் பதிவு செய்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஒற்றுமையை சீர்குலைத்து வரும் இது போன்ற நபர்களுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


