
கோலாலம்பூர் பிப் 20
எந்தவொரு வழக்கு விசாரணையிலும் ஆதாரத்தை ஏற்றுக் கொள்வதா அல்லது இல்லையா என்பதை முடிவு செய்வது நீதிமன்றம் தான் என பெர்சாத்து கட்சியின் மலாய்காரர்கள் அல்லாதவர் பிரிவின் உதவி தலைவர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் தெளிவுபடுத்தினார்.
இந்த நிலையில் சபா சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஒரு காணொளியை ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியாது என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆணையர் அசாம் பாக்கியின் அறிக்கை வேடிக்கையாக இருப்பதாக அவர் சொன்னார்.
இந்த ஊழல் குற்றச்சாட்டு விசாரணையில் சம்பந்தப்பட்ட காணொளியை ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியாது என அசாம் கூறியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் அசாம் நீதிபதி அல்ல. ஆதாரத்தை ஏற்றுக் கொள்வதா என்பதை முடிவு செய்வது நீதிமன்றம் தான் என அவர் சுட்டிக் காட்டினார்.
நீதிமன்றத்தின் பணியை ஊழல் தடுப்பு ஆணையம் கையில் எடுத்துக் கொண்டது போல் ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
விசாரணையில் ஒரு ஆதாரத்தை ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்ற உரிமை நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது.
இந்த விவகாரத்தில் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு எவ்வித பங்கும் இல்லை என அவர் சுட்டிக் காட்டினார்.
1.PP v.Datuk Harun bin Idris(1977)
2.Sivakumar v.PP(2009)
3.Wong Keng Leong v.PP(1996)
மேற்கண்ட 3 நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் ஆதாரத்தை ஏற்றுக் கொள்வதா அல்லது இல்லையா என்பதை நீதிபதி தான் முடிவு செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சஞ்சீவன் கோடிக் காட்டினார் .
ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையில் மட்டும் தான் தனது கவனத்தை செலுத்த வேண்டும். அந்த விசாரணையில் கிடைக்கப்படும் ஆதாரங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
அந்த ஆதாரங்களை ஏற்றுக் கொள்வதும் அல்லது நிராகரிப்பதும் நீதிமன்றத்தின் தார்மீக கடமை என அவர் சுட்டிக் காட்டினார்.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் என்ற நிலையில் அசாம் பாக்கி இதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.


