
பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 13 – மலேசியாவில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ‘தமிழ் ஸ்கூல் பசங்க’ திரைப்படத்தின் மூலம் உள்ளூர் திரைப்படத் துறை தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
முன்னதாக இப்படத்தின் சிறப்புக் காட்சி சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, LFS PJ State-இல் தொடர்பு துணையமைச்சர் தியோ நி சிங் முன்னிலையில் நடைபெற்றது.
மலேசியர்கள் உள்ளூர் படைப்புகள் மீது பெருமிதம் கொள்வதோடு, கலைஞர்களுக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்க வேண்டும் என்று தியோ கேட்டுக் கொண்டார். இம்முயற்சி, எதிர்காலத்தில் இன்னும் தரமான படங்கள் உருவாக ஊக்குவிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இத்திரைப்படத்தை டேனிஷ் குமார் மற்றும் டி.எஸ். முனைவர். விமலா பெருமாள் தயாரிப்பில், கே. ஷண்முகம் இயக்கத்தில் தமிழ்ப்பள்ளியின் பின்னணிக் கதையைக் கொண்டுள்ளது. திரைப்படம் பொழுதுபோக்காக மட்டுமல்ல, மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மற்றும் கலாச்சாரம் பற்றிய ஆழமான சிந்தனைகளைக் கொண்டுள்ளது.

“ஆசிரியர்கள், மாணவர்கள், திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் என 140 பேருடன் இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தரம் நிறைந்த இந்தத் திரைப்படத்தை நான் பார்த்து ரசித்தேன். நீங்களும், இந்தப் இத்திரைப்படத்தைப் பார்த்து, உள்ளூர் படைப்புகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.” என கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ குறிப்பிட்டார்.
‘தமிழ் ஸ்கூல் பசங்க’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியில், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி.கணபதிராவ், மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (ஃபீனாஸ்) தலைமை நிர்வாக அதிகாரி, டத்தோ அஸ்மிர் சைபுடின் மற்றும் லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் சினிமாஸ் தலைமை நிர்வாக அதிகாரி, திரு. கருணா மூர்த்தி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.


