
சுபாங்,பிப்.6-
கோலாலம்பூரிலிருந்து புகழ்பெற்ற இந்திய சுற்றுலா நகரான கோவாவிற்கு நேரடி விமான சேவையை தொடங்க பாத்தேக் ஏர் திட்டம் கொண்டுள்ளதாக அந்த விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
அந்த புகழ் பெற்ற சுற்றுலா நகருக்கு வாரத்திற்கு 3 விமான சேவைகளை மேற்கொள்ள பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
இன்று பாத்தேக் ஏர் தலைமையகத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
மற்றொரு பாலி என கருதப்படும் கோவா மலேசிய சுற்றுப் பயணிகளை அதிகம் கவரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தற்போது இந்தியாவில் 6 நகரங்களுக்கு பாத்தேக் ஏர் சிறகடித்து வருகிறது.
தற்போது திருச்சிக்கு தினசரி காலை மற்றும் மாலையில் 2 விமான சேவைகளை பாத்தேக் ஏர் மேற்கொண்டு வருகிறது.
இவை தவிர்த்து இந்தியாவில் கோவா உட்பட இன்னும் சில நகரங்களுக்கு விமான சேவை மேற்கொள்ளவது குறித்து தமது விமான நிறுவனம் வியூகத் திட்டங்களை வகுத்து வருவதாக அவர் சொன்னார்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 68 லட்சம் பயணிகளை பாத்தேக் ஏர் கொண்டு சென்றுள்ளன. இவ்வாண்டில் இந்த எண்ணிக்கை துரிதமாக உயரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சபா மற்றும் சரவாக் மாநிலத்தில் பாத்தேக் ஏர் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
சரவாக் தலைநகரான கூச்சிங்கிற்கு தினசரி 4 விமான சேவைகளை மேற்கொண்டு வருகிறது.

2026 மலேசியா வருகையாளர் ஆண்டு என்பதால் இவ்விரு மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என அவர் சொன்னார்.
இந்த வருகையாளர் ஆண்டில் 34.6 மில்லியன் சுற்றுப்பயணிகளை தெரிவிக்க அரசாங்கம் இலக்கை கொண்டுள்ளது.
அரசாங்கம் இந்த இலக்கை அடைய பாத்தேக் ஏர் மலேசிய சுற்றுலாத்துறைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என அவர் சொன்னார்.
இதனிடையே கோவிட் 19 தாக்கத்திலிருந்து 90 விழுக்காடு வழக்க நிலைக்கு திரும்பி விட்டதாக அவர் சொன்னார்.
தற்போது பாத்தேக் ஏர் 52 விமானங்களை க் கொண்டு இயங்கி வருகிறது. இவ்வாண்டில் மேலும் 15 விமானங்களை பாத்தேக் ஏர் தருவிக்க விருப்பதாக டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.


