
கோலாலம்பூர் பிப் 5
எதிர்வரும் பிப் 11 ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெறவிருக்கும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மனிதவள அமைச்சு கெசுமா மடானி முன்னெடுப்பு திட்டத்தை நடத்துகிறது.
கடந்த ஆண்டு பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் மற்றும் பினாங்கு ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்திலும் இந்த கெசுமா மடானி முன்னெடுப்பு திட்டம் நடத்தப்பட்டதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.
இந்த த் திட்டத்தின் கீழ் கெசுமா மடானி மூலமாக மக்களுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ் குறிப்பாக பக்தர்கள் ஓய்வு எடுக்கும் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என அவர் சொன்னார்.
அதே வேளையில் வீரா கெசுமா எனும் தன்னார்வ அடிப்படையிலான திட்டமும் மேற்கொள்ளவிருப்பதாக அவர் சொன்னார்.
இந்த திட்டத்தின் கீழ் சுமார் 300 தன்னார்வ இளைஞர்கள் பக்தர்களுக்கு உதவிகளை வழங்குவார்கள் என்றார் அவர்.
இதனிடையே மனிதவள அமைச்சின் இந்தத் திட்டத்தை தாம் பெரிதும் வரவேற்பதாக தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள் மற்றும் வேலை வாய்ப்புகளை நமது இந்திய இளைஞர்கள் தெரிந்து கொள்ள முடியும் என அவர் சொன்னார்.
மனிதவள அமைச்சின் டெலான்ட் கோர்ப்,பெர்கேசோ போன்ற நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளை நமது இந்திய இளைஞர்கள் நேரடியாக தெரிந்து கொள்ள ஒரு பொன்னான வாய்ப்பு இது என அவர் சொன்னார்.
இந்திய சமூகத்தின் நலன் கருதி இந்த திட்டத்தை தொடங்கியுள்ள மனிதவள அமைச்சரை தாம் மிகவும் பாராட்டுவதாக அவர் சொன்னார்.
அதே வேளையில் மக்களுக்கான விழிப்புணர்வு குறித்து தேசிய ஒற்றுமை துறை அமைச்சு வெளியிட்டுள்ள கையேடுகளை பொது மக்களின் பார்வைக்கு வைக்க வாய்ப்பு வழங்கிய மனித வள அமைச்சருக்கு தாம் பெரிதும் நன்றி கூறுவதாக சரஸ்வதி குறிப்பிட்டார்.


