
அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்க டாலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளை மீண்டும் எச்சரித்துள்ளார். இதற்கு மாறாக செயல்படும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் புதிதாக எந்த நாணயத்தையும் உருவாக்கக் கூடாது. மேலும், ஏற்கனவே இருக்கும் வேறு நாட்டு நாணயத்தையும் பயன்படுத்த கூடாது. சர்வதேச வியாபாரங்களுக்கு பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை மாற்ற நினைக்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும்.
அவர்களுக்கு வேறொரு ஏமாளி கிடைத்தால் அவர்களுடன் வியாபாரம் செய்யட்டும். டாலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள் என்று டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை அடங்கும். இந்நாடுகளுக்கு பொதுவான நாணயம் இல்லை.
இதற்கிடையே உக்ரைனில் நடந்துவரும் போரின் காரணமாக ரஷியா பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டது. இதனைத்தொடர்ந்து டாலரின் வல்லாதிக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என ரஷியா வலியறுத்தி வருகிறது.


