
கோலா திரெங்கானு ஜன 2
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் குறித்து வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங்கின் அறிக்கை அவதூறாக உள்ளதாக பாஸ் ஆதரவு பேரவையின் திரெங்கானு கிளை தலைவர் டாக்டர் பாலச்சந்திரன் கூறினார்.
இந்த விவகாரத்தில் அந்த அமைச்சர் இந்நாட்டில் உள்ள இஸ்லாமியர்களை அவமதிப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு பாஸ் கட்சி தடையாக இருப்பதாக ஙா கூறியிருப்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றார் அவர்.
இந்நாட்டில் பல இனங்கள் அமைதி மற்றும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் குறித்து ஙா வெளியிட்டுள்ள அறிக்கை ஒற்றுமையை சீர்குலைப்பது போல் இருப்பதாக அவர் சொன்னார்.
ஆகையால் முஸ்லிம் அல்லாத ஙா இஸ்லாமிய விவகாரங்கள் குறித்து கருத்துரைப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என அவர் சாடினார்.
பல இனங்கள் வாழும் இந்நாட்டில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு மட்டுமே அனைத்து தலைவர்களும் கவனத்தை செலுத்த வேண்டும்.
மக்களை பிளவுபடுத்தும் வகையிலான அறிக்கைகள் வெளியிடுவதை குறிப்பாக அரசியல் தலைவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்.
பல்லின சமூகங்கள் வாழும் இந்நாட்டில் அனைத்து சமயங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதை அரசியல் சட்டம் வலியுறுத்தி வருகிறது.
ஆகையால் அரசியல் தலைவர்கள் மிக கவனத்துடன் அறிக்கைகளை வெளியிட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அவதூறாக அறிக்கை வெளியிட்டல்ல அமைச்சர் ஙாவிற்கு எதிராக பாஸ் ஆதரவு பேரவை போலீஸ் புகார்களை செய்து வரும் என டாக்டர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.


