
செப்பாங் டிச 13
முன்னணி விமான நிறுவனமான பாத்திக் ஏர் கோலாலம்பூர்-அலோர் ஸ்டார் ஆகிய நகரங்களுக்கிடையிலான நேரடி விமான சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
சுறுசுறுப்பான மலேசியாவின் வட மாநில தலைநகரை இணைக்கும் இந்த புதிய விமான சேவை ஒரு மைல்கல் என்று தான் கூற வேண்டும்.
கடந்த 5 டிசம்பரில் தொடங்கப்பட விருந்த இந்த விமான சேவை அண்மையில் கெடாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த புதிய விமான சேவை இரு முக்கிய நகரங்களுக்கிடையே புதிய போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த புதிய விமான சேவை கிள்ளான் பள்ளத்தாக்கு மக்கள் கெடாவின் வரலாற்று மற்றும் பாரம்பரிய அம்சங்களை கண்டறிய ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
அலோர் ஸ்டார் வரலாற்று அடையாளங்கள், அற்புத கலாச்சாரங்கள், இயற்கை அழகு பறிக்கும் குனோங் ஜெராய் மற்றும் பறந்த நெல் வயல்கள் போன்றவற்றிற்கு புகழ்பெற்ற ஒரு நகராகும். குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கு மக்களுக்கு இந்த புதிய விமான சேவை ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
இந்த புதிய விமான சேவை சுற்றுலா துறையை வலுவடைய செய்வதோடு மட்டுமின்றி, வட பிராந்தியத்தில் அதிகரித்து வரும் தொழில் துறைகளில் பங்கு பெற வர்த்தக பயணிகளுக்கு இது ஒரு அற்புத வாய்ப்பு என்று தான் கூற வேண்டும்.
இதனிடையே இந்த புதிய விமான சேவை மலேசியாவின் வட மாநிலங்களின் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என பாத்திக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
கோலாலம்பூர் மற்றும் வட மாநிலங்களுக்கிடையே வர்த்தக மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை அதிகரிக்க செய்ய இந்த புதிய விமான சேவை ஒரு தூண்டுதலாக அமையும் என அவர் சுட்டிக் காட்டினார்.

அதுமட்டுமின்றி விவசாயம், தயாரிப்பு துறை மற்றும் வர்த்தக வாய்ப்புகள் அதிகரிக்கும் என அவர் சொன்னார்.
அலோர் ஸ்டாருக்கான பாத்திக் ஏரின் இந்த நேரடி விமான சேவை கெடா மாநில சுற்றுலா துறையை வலுவடைய செய்யும் என மாநில சுற்றுலா கலாச்சார மற்றும் தொழில் முனைவோர் குழுவின் தலைவர் டத்தோ முகமட் சாலே சைடின் கூறினார்.
பாத்திக் ஏரின் கெடா மாநில பிரவேசம் வரலாற்று பூர்வமான ஒன்று என்றார் அவர்.
2025 கெடா மாநிலத்திற்கு வருகை புரியும் ஆண்டு தொடர்ந்து பாத்திக் ஏரின் இந்த விமான சேவை பொருத்தமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நேற்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து (கேஎல்ஐஏ) பாத்திக் ஏர் பயணிகளை கெடா மாநில அரசாங்க செயலாளர் டத்தோஸ்ரீ நொரிஷான் கசால, அலோர் ஸ்டார் மேயர் டத்தோ முகமட் யூஸ்ரி,டெர்கா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அலி, கெடா சுற்றுலாத்துறை இயக்குனர் டாக்டர் முகமட் ஷா மற்றும் பாத்திக் ஏர் அதிகாரிகள் இன்முகத்துடன் வரவேற்றனர்.


