
புத்ராஜெயா டிச 5
வங்காளதேசத்தில் சிறுபான்மை சமூகமான இந்துக்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என பிரதமர் இலாக்கா
( சட்டம் மற்றும் நீதி சார் சீர்திருத்தம்) துணையமைச்சர் எம். குலசேகரன் வலியுறுத்தினார்.
அண்மையகாலமாக அந்நாட்டில் சிறுபான்மை சமூகமான இந்துக்கள் மீது தாக்குதல் மற்றம் இந்துக்களின் வழிபாட்டு தலங்களை இழிவுபடுத்தும் சம்பவங்கள் அச்சத்தை தருவதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
இது போன்ற சம்பவங்கள் சிறுபான்மை சமூகங்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கு மிரட்டலாக இருந்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
தனது அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் மற்றும் உரிமைகளை பேணுவதும் வங்காளதேசம் இடைக்கால அரசாங்கத்தின் கடமை என்றார் அவர்.
இந்த வன்செயல்கள் உடனடியாக தடுத்து நிறுத்த அந்நாட்டு இடைக்கால அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுப்பதோடு, இந்த பொறுப்பற்ற செயல்களுக்கு காரணமான தரப்பினரை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
பல கலாச்சாரங்களை கொண்டு சமூகத்தில் சவால்கள் இயல்பான ஒன்று. இது கருத்து வேறுபாடுகளாக மாறி சர்ச்சைகள் உருவெடுக்கலாம்.
ஆனால் இது ஒரு கலவரமாக மாறுவதை தடுத்து நிறுத்துவது அந்தந்த நாட்டு அரசாங்கத்தின் தார்மீக கடமை என அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற தருணங்களில் அனைத்து தரப்பினரும் ஒற்றுமைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
மனித உரிமைகளை பாதுகாப்பதும், நிலைத்தன்மையை பேணுவதும் அரசாங்கத்தின் பிரதான கடமையாகும்.
ஆகையால் வங்காள தேசத்தில் நிலவி வரும் பதற்றம் ஒரு முடிவுக்கு வரவேண்டும். அங்கு அமைதி தொடர வேண்டும் என குலசேகரன் குறிப்பிட்டார்.


