
செப்பாங் டிச 5
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொண்டாடப்படவிருக்கும் சீன புத்தாண்டு காலத்தில் சபா மற்றும் சரவாவிற்கு நிர்ணயிக்கப்பட்ட ஒரு வழிப் பயண கட்டணத்தை உலகின் தலைசிறந்த மலிவு விலை கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா வழங்குகிறது.
இருப்பினும் இந்த தொகை இவ்வாண்டுக்கு ஏர் ஆசியா முடிவு செய்த கட்டணத்தை விட சற்று அதிகம் என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
கோலாலம்பூரிலிருந்து கூச்சிங்,சிபு,பிந்துலு மற்றும் மீரி, அதே போல் ஜொகூர் பாருவிலிருந்து கூச்சிங், சிபு மற்றும் மீரி ஆகிய நகர்களுக்கு ஒரு வழி பயண கட்டணம் வெ 328 ஆக விற்கப்படுவதாக நேற்று ஏர் ஆசியா தலைமையகத்தில் அவர் அறிவித்தார்.

ஆனால் இவ்வாண்டில் இந்த நகர்களுக்கு ஒரு வழி பயண கட்டணம் வெ 298 ஆக விற்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே கோலாலம்பூரிலிருந்து கோத்தா கினபாலு,சான்டகான் மற்றும் தாவாவ், அதே போல் ஜொகூர் பாருவிலிருந்து கோத்தா கினபாலு ஆர்கே நகரங்களுக்கு ஒரு வழி பயணம் கட்டணம் வெ 388 ஆக விற்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மலேசியர்களுக்கு விமான பயணம் மலிவாக மற்றும் அணுகக் கூடிய வகையில் இருக்கும் முயற்சிகளில் முன்னணி வகித்து வரும் ஏர் ஆசியாவை அவர் வெகுவாக பாராட்டினார்.
பெருநாள் காலங்களில் மக்கள் ஒன்றிணையும் முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் என அவர் உறுதியளித்தார்.

இதன் காரணமாகவே ஏர் ஆசியா மற்றும் இதர சம்பந்தப்பட்ட தரப்பினருடன் அரசாங்கம் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
இது போன்ற காலகட்டங்களில் பயணிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் வீடுகளுக்கு திரும்ப ஏர் ஆசியா மேற்கொண்டு வரும் நடவடிக்கை அளப்பரியது என அவர் தெரிவித்தார்.
அனைவரும் மலிவான கட்டணத்தில் விமான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஏர் ஆசியா உறுதியாக இருப்பதாக அவர் சொன்னார்.
இந்த பெருநாள் கொண்டாட்டம் காலகட்டத்தில் வாரம் முழுவதும் ஏர் ஆசியா 3,600 விமான சேவைகளை மேற்கொள்ளும் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் ஏர் ஆசியா எவியேஷன் குழும நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஃபோ லிங்கம் உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


