
ஜொகூர் பாரு டிச 3
ஜொகூர் பாரு மற்றும் தாய்லாந்தின் தலைநகரான பேங்காக் இடையிலான பாத்திக் ஏரின் புதிய நேரடி விமான சேவைக்கு மலேசியா சுற்றுலாத்துறை தனது ஆதரவை வழங்கியுள்ளது.
பாத்திக் ஏரின் இந்த துணிச்சலான நடவடிக்கை உள்நாட்டு சுற்றுலாத்துறை குறிப்பாக ஜொகூர் மாநிலத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு துணை புரியும் என மலேசிய சுற்றுலாத்துறை தலைமை இயக்குனர் மனோகரன் பெரியசாமி கூறினார்.
இது மட்டுமின்றி இந்த புதிய விமான சேவை இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பாத்திக் ஏர் நேற்று ஜொகூர் பாரு, செனாய் அனைத்துலக விமான நிலையம் மற்றும் பேங்காக், டான் மியூயாங் அனைத்துலக விமான நிலையத்திற்கு இடையிலான நேரடி விமான சேவையை தொடங்கியது.
இந்த புதிய விமான சேவையில் பாத்திக் ஏர் விமான நிறுவனத்துடன் ஒத்துழைப்பு வழங்குவதில் மலேசிய சுற்றுலாத்துறை மகிழ்ச்சி அடைவதாக அவர் சொன்னார்.
இந்த புதிய விமான சேவையை பயன்படுத்தி தாய்லாந்து சுற்றுலா முகவர்கள் மலேசியாவிற்கு 3 நாள் 2 இரவு அறிமுக சுற்றுலாவை ஏற்பாடு செய்யலாம் என அவர் ஆலோசனை கூறினார்.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் மலேசியா ஆசியான் தலைமைத்துவ பொறுப்பை ஏற்கவிருப்பதால் பாத்திக் ஏரின் இந்த புதிய விமான சேவை பொருத்தமான நேரத்தில் அமைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் இந்த புதிய விமான சேவையால், ஜொகூரில் வெளிநாட்டு சுற்றுப்பயறுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அவர் சொன்னார்.
இதனிடையே இந்த புதிய விமான சேவையின் மூலம் மலேசியாவின் தென் மாநிலங்களில் உள்ள சுற்று பயணிகள் பேங்காக் நகருக்கு எளிதில் செல்ல முடியும் என பாத்திக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
தாய்லாந்தின் அழகிய நகரான பேங்காகிற்கு பயணிக்க விரும்பும் சுற்றுப்பயணிகள் இனி சிங்கப்பூர் அல்லது கோலாலம்பூருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என அவர் சுட்டிக் காட்டினார்.

பாத்திக் ஏரின் இந்த நேரடி விமான சேவை ஜொகூர் பாரு மற்றும் பேங்காக் சுற்றுலாத் துறையை வலுவடைய செய்யும் என அவர் சொன்னார்.
பாத்திக் ஏர் இன்னும் பல அனைத்துலக நகரங்களுக்கு சிறகடிக்க வியூகத் திட்டங்களை வகுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.


