
சிரம்பான் ஜூலை 27
எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சியை கைப்பற்றி, மஇகா தனது 2 தொகுதிகளையும் கைப்பற்றினால் கட்சிக்கு 2 ஆட்சி குழு உறுப்பினர் பதவிகள் வழங்கப்படும் என்ற செய்தி நமக்கு கிடைக்கப் போகும் ஒரு வரப்பிரசாதம் என மஇகா மத்திய செயலவை உறுப்பினர் சிவசுப்பிரமணியம் கூறினார்.
தேசிய முன்னணி தலைவரும் துணை பிரதமருமான டத்தோஸ்ரீ ஸாஹிட் அமிடியின் இந்த அறிவிப்பு நமக்கு உற்சாகத்தை தருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடும் 2 தொகுதிகளையும் மஇகா கைப்பற்றியே ஆக வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணியை பிரதிநிதித்து மஇகாவின் சார்பில் சிரம்பான் ஜெயா தொகுதியில் வழக்கறிஞர் தினாளன் மற்றும் ஸ்ரீ தஞ்சோங் தொகுதியில் அச்சுதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த இரண்டு தொகுதிகளையும் கைப்பற்ற மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் தலைமையிலான தேர்தல் பணிக் குழு முழு மூச்சாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
அண்மையில் நடந்து முடிந்த ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் நாம் அடைந்த 100 விழுக்காடு வெற்றியை நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலிலும் நிரூபிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்திய சமூகத்தின் ஆதரவு மஇகாவிற்கு திரும்பிவிட்டது என்பதை ஜொகூர் சட்டமன்றத் தேர்தல் உறுதி செய்துவிட்டது.
இந்த நிலையில் கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளிலும் நமது வேட்பாளர்களை வெற்றியடைய செய்ய இந்திய வாக்காளர்கள் திரளாக வந்து வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


