
செனாய்-ஜொகூர் பாரு டிச 2
முன்னணி விமான நிறுவனமான பாத்திக் ஏர் இன்று ஜொகூர் பாரு-பேங்காக் நேரடி விமான சேவையை வெற்றிகரமாக தொடங்கியது.
மலேசியாவின் தென் மாநிலங்களை சேர்ந்த பயணிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது.
எல்லைகளை இணைக்கும் இந்த புதிய விமான சேவை மலேசியா மற்றும் தாய்லாந்துக்கிடையே சுற்றுலா மற்றும் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்கும்.
இன்று காலை தாய்லாந்தின் டான் மியூயாங் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து செனாய் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த பாத்திக் ஏர் பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜொகூர் ஒற்றுமை, கலை மற்றும் பண்பாடு குழுவின் ஆட்சிக் குழு உறுப்பினர் ரவீன் குமார், செனாய் விமான நிலைய தலைமை செயல்முறை அதிகாரி கெனடி ஆயூ, ஜொகூர் சுற்றுலாத்துறை இயக்குனர் ஷாரில் நிஷாம், மலேசிய சுற்றுலாத்துறை அனைத்துலக விளம்பர பிரிவு இயக்குனர் முகமட் ரோஸ்லான் ஆகியோர் அன்புடன் வரவேற்றனர்.
இதனிடையே முக்கிய ஆசியான் நகர்களுக்கு பாத்திக் ஏரின் வியூக விஸ்தரிப்பில், பேங்காக் நகருக்கான இந்த நேரடி விமான சேவை ஒரு மைல் கல் என பாத்திக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.

ஜொகூர் பாரு-பேங்காக் நேரடி விமான சேவை ஜொகூர் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முன்னெடுப்பு என்றார் அவர்.
இந்த நேரடி விமான சேவை முக்கிய நகரங்களான ஜொகூர் பாரு மற்றும் பேங்காக் சுற்றுலாத்துறை, வர்த்தகம் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜொகூர் பாரு அனைத்துலக சுற்றுப் பயணிகளுக்கு ஒரு நுழைவாசல் என்பதால், குறிப்பாக அனைத்துலக சுற்றுப்பயணிகள் இந்த புதிய விமான சேவையை
நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் ஆலோசனை கூறினார்.
ஜொகூர் பாரு-பேங்காக் நேரடி விமான சேவை தாய்லாந்து வர்த்தக சமூகத்திற்கு ஒரு பொன்னான வாய்ப்பு என அவர் தெரிவித்தார்.

இதனிடையே இந்த நேரடி விமான சேவை ஜொகூர் பாரு மற்றும் பேங்காக் உறவுகளை மேலும் வலுவடைய செய்யும் என ஜொகூர் சுற்றுலாத்துறை இயக்குனர் ஷாரில் நிஷாம் கூறினார்.
தாய்லாந்தை தளமாக கொண்டுள்ள தொழில் அதிபர்கள் இந்த நேரடி விமான சேவை மூலம் தங்களின் வர்த்தகத்தை பெருக்கிக் கொள்ள முடியும் என அவர் சொன்னார்.


