
கோலாலம்பூர் நவ 12
வெளிநாட்டில் பட்டம் பெற்ற வழக்கறிஞர்களுக்கு மலாய் மொழியில் திறமை குறைவு என்ற குற்றச்சாட்டை பிரதமர் இலாகா ( சட்டம் மற்றும் நீதி சார் சீர்திருத்தம்) துணையமைச்சர் எம். குலசேகரன் மறுத்தார்.
தமது அனுபவத்தை பொறுத்தவரையில் இந்த வழக்கறிஞர்கள் மலாய் மொழியில் திறமை பெற்றவர்கள் என்றார் அவர்.
வழக்குகளை நடத்தும் போது குறுக்கு விசாரணை செய்வதில் இவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதாக அவர் சொன்னார்.
ஆகையால் இது ஒரு சர்ச்சையல்ல. இவர்களிடம் திறமை இல்லாவிட்டால் வாடிக்கையாளர்கள் இவர்களை நாட மாட்டார்கள் என அவர் சுட்டிக் காட்டினார்.
மலேசியாவில் உள்ள நீதிமன்றங்களில் மலாய் மொழி கட்டாயமான மொழியாகும். சில சூழ்நிலைகளில் மட்டுமே ஆங்கில மொழி பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட ஒரு நபருக்கு திறமை இல்லாவிட்டால் அந்த நபர் வழக்கறிஞராக இருக்க முடியாது, நீதிமன்றத்திற்கு போக முடியாது என அவர் சுட்டிக் காட்டினார்.
மலேசியாவில் பணிபுரியும் வழக்கறிஞர்கள் மலாய் மற்றும் ஆங்கில மொழிகளில் திறமை பெற்றிருக்க வேண்டும்.
வழக்குகள் தொடர்பான பெரும்பாலான ஆவணங்கள் ஆங்கில மொழியில் தான் உள்ளது என அவர் தெரிவித்தார்.
இதனிடையே கடந்த மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் தணிக்கை செயலாளர் பதவிக்கு ஒருவரை நியமனம் செய்ய படி சட்ட தொழில் தர நிர்ணய வாரியத்திற்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
கடந்த 17 ஆண்டுகளாக இந்த வாரியத்தின் கணக்குகள் தணிக்கை செய்யாமல் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என குலா தெரிவித்தார்.


