
பிந்துலு நவ 3
பாத்திக் ஏரின் புதிய கோலாலம்பூர்-பிந்துலு நேரடி விமான சேவை இரு தரப்பின் சுற்றுலா மற்றும் வர்த்தகத் துறை அதிகரிக்கும் என சுற்றுலா,கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை பாத்திக் ஏர் தொடங்கிய இந்த புதிய விமான சேவை இரு தரப்பினருக்கும் ஒரு புதிய அத்தியாயம் என்றார் அவர்.
இந்த இரண்டு நகரங்களுக்கு இடையிலான நேரடி விமான சேவை இரு தரப்பினரின் வர்த்தக மற்றும் சுற்றுலாத் துறைகளை துரித வளர்ச்சி அடைய செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த புதிய விமான சேவையை தொடங்குவது ஒரு எளிதான காரியமல்ல. அதிகமான ஏற்பாடுகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் இணக்கத்திற்கு பிறகு இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாக பிந்துலு நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
அரசாங்க நிறுவனங்கள், விமான நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகிய தரப்பினரின் ஒத்துழைப்பு தொடர்ந்து இந்த புதிய விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதாக டுடோங் சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
கோலாலம்பூர்-பிந்துலு மற்றும் ஜொகூர் பாரு-பிந்துலு விமான சேவைகள் குறித்து கடந்த ஜூலை 30 ஆம் தேதி தமது அமைச்சு மற்றும் பாத்திக் ஏர் இடையிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த பேச்சுவார்த்தையில் பாத்திக் ஏர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதோடு, இப்புதிய விமான சேவைக்கு இணக்கம் தெரிவித்ததாக அவர் சொன்னார்.
கோலாலம்பூர்-பிந்துலு நேரடி விமான சேவைக்கு மலேசியா விமான போக்குவரத்து கழகம் இணக்கம் தந்துள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் பாத்திக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறியிருந்தார்.
இந்த புதிய விமான சேவை இரு தரப்பினருக்கும் இடையே வர்த்தக மற்றும் சுற்றுலா துறையை அதிகரிக்கச் செய்யும் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அதே வேளையில் கிழக்கு மலேசியாவில் பாத்திக் ஏர் தனது விமான சேவையை பாத்திக் ஏர் அதிகரிக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.


