
கோலாலம்பூர் அக் 31
அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் இந்திய சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதி ராவ் கூறினார்.
இந்திய சமூகத்தின் உருமாற்று பிரிவான மித்ராவுக்கு வெ 300 மில்லியன் ஒதுக்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்ட போதும், வெ 100 மில்லியன் தான் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த 9 ஆண்டுகளாக எந்தவித அதிகரிப்பும் இன்றி மித்ராவுக்கு வெ 100 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது நியாயம் தானா? என அவர் கேள்வி எழுப்பினார்.
இந்து சமூகத்தில் தொகை மற்றும் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த சமூகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படவில்லை என்றார் அவர்.
மித்ராவுக்கு வெ 300 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என பல இந்திய சமூக தலைவர்கள் கோரிக்கை விட்டு வந்த போதிலும், இதற்கு அரசாங்கம் செவி சாய்க்கவில்லை என அவர் சொன்னார்.
தேசிய வகை தமிழ் மட்டும் சீன பள்ளிகளில் மேம்பாட்டு திட்டங்களுக்கு வெ 250 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்திய மாணவர்கள் மேற்கல்வியை தொடர வெ 200 மில்லியன் கல்வி உபகார சம்பளமாக அரசாங்கம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.


