
இங்குள்ள இந்திய தூதரகம் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையம் இணைந்து ‘ஆரோக்கியமான முதுமைக்கான யோகா’ என்ற கருப்பொருளில் கொண்டாட்டத்தை நடத்தியது.
இந்த 12 ஆவது அனைத்துலக யோகா தின பயிற்சி நேற்று ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை தலைநகரில் உள்ள SSU Kelab Aman மைதானத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு செனட்டர் சரஸ்வதி கந்தசாமி சிறப்புப் பிமுகராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஹிதேஷ் ராஜ்பால் தலைமை தாங்கி வரவேற்புரை வழங்கினார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு மற்றும் முயற்சிக்கில் தொடங்கி, கடந்த 12 ஆண்டுகளாக மலேசியாவில் ஒரு மாபெரும் இயக்கமாக மாறி உள்ள சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களின் பரிணாம வளர்ச்சியை பற்றி ஹிதேஷ் விரிவாக பேசினார்.
மேலும் யோகா உலகளவில் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது என்பதை கோடிக் காட்டினார்.
உடல், மன மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்துவதில் யோகாவின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
மேலும் அனைத்து தரப்பு மலேசியா களுக்கு இடையேயும் யோகா இத்தகைய ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார்.
மேலும் மலேசியா அரசாங்கத்திற்கும், அமைப்புகளுக்கும், பல்வேறு அரசு சாரா இயக்கங்களுக்கும் மற்றும் மலேசியாவில் யோகாவை தொடர்ந்து கடைபிடித்து வரும் யோகா ஆர்வலர்களுக்கும் அவர் நன்றி கூறினார்.
இதனிடையே ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான சமுதாயத்தை உருவாக்குவதில் யோகா முக்கிய பங்காற்றி வருவதாக சரஸ்வதி தமதுரையில் கூறினார்.

மேலும் ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்காக பங்கேற்பாளர்கள் யோகாவை தங்களது அன்றாட வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
யோகாவின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் ஒவ்வொரு ஆண்டும் பெருமளவிலான சமூகப் பங்கேற்பை தூண்டுவதிலும் இந்திய தூதரகம் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் தூதரக அதிகாரிகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், மூத்த அதிகாரிகள், பல்வேறு இந்திய சமூக மற்றும் கலாச்சார சங்கங்களின் தலைவர்கள், ஊடகங்கள் மலேசியா குடிமக்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்திய வம்சா வழியினர் உட்பட 1,100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோலாலம்பூரில் நடைபெறும் உலக முவேதாய்(Muaythai) சாம்பியன்ஷிப் போட்டிக்காக தற்போது மலேசியாவில் இருக்கும் இந்திய முவேதாய் சங்கத்தின் பொதுச் செயலாளர் தலைமையிலான இந்திய முவேதாய் விளையாட்டு வீரர்களின் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்பாளர்களுக்காக 40 நிமிட யோகா பயிற்சி அமர்வு நடைபெற்றது.
இந்திய அரசின் ஆயுஸ் அமைச்சகத்தின் பொதுவான யோகா நெறிமுறைகளின் படி யோகா ஆசிரியர்களால் இது நடத்தப்பட்டது.
உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
இது 2014 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது தொடர்ந்து, முதலாவது சர்வதேச யோகா தினம் 2015 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.


