
இங்கு பாண்டார் புத்ராவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு செல்லும் முக்கிய சாலையை மூடிய கூலாய் மாநகர் மன்றத்தின் தன்முப்பான செயலை மலேசியத் பயனீட்டாளர் நீதி இயக்கம் வன்மையாக கண்டித்துள்ளது.
கூலாய் மாநகர் மன்றத்தின் இந்த தன்முப்பான செயல் ஒரு சமயத்தின் உரிமையை தடுப்பதற்கு சமமாகும் என மலேசிய பயனீட்டாளர் நீதி இயக்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் எஸ்பி பிரேம் சாடினார்.
இந்த சாலை மூடப்பட்டதால் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வழிபாட்டிற்கு செல்லும் பக்தர்கள், பல இன்னல்களை கடந்து அந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த ஆலயத்திற்கு செல்லும் முக்கிய சாலை மூடப்படுகிறது என கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கூலாய் மாநகர் மன்றம் மிரட்டல் நோட்டீஸ் வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஆனால் இந்த விவகாரத்தில் மஇகா கூலாய் தொகுதி கண்டும் காணாமல் இருந்து வருவதாக அவர் சாடினார்.
இரு அணிகளாக செயல்பட்டு வரும் கூலாய் தொகுதி மஇகா, தனது கட்சி உட்பூசலில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இந்த வட்டாரத்தில் உள்ள இந்திய சமூகம் எதிர்நோக்கி வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண சற்றும் கவனம் செலுத்தவில்லை என்றார் அவர்.
இந்த ஆலய விவகாரம் தொடர்பாக இவ்வட்டார இந்திய சமூகம் தற்போது மலேசிய பயனீட்டாளர் நீதி இயக்கத்தின் உதவியை நாடியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண தமது இயக்கம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் தொடர்பு கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஜொகூர் மாநில அரசாங்கத்தில் உள்ள இந்திய பிரதிநிதிகள் இந்த விவகாரத்தில் ஏன் கவனம் செலுத்தவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.
ஜொகூர் மாநில அரசாங்கத்தில் இந்திய சமூகத்தை பிரதிநிதித்து ஒரு ஆட்சி குழு உறுப்பினர் மற்றும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர்.
ஆனால் இந்த ஆலய விவகத்தில் இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என அவர் கேள்வி எழுப்பினார்.
விரைவில் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்குள்ள இந்திய சமூகத்தினர் விழிப்பாக சிந்தித்து செயல்பட வேண்டும் என டாக்டர் பிரேம் கேட்டுக்கொண்டார்.


