
விரைவில் நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பிபிபி கட்சி 2 தொகுதிகளில் போட்டியிட இலக்கை கொண்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோக பாலா கூறினார்.
இருப்பினும் தமது கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து அவர் கருத்துரைக்கவில்லை.
மேலும் இந்த விருப்பம் குறித்து ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபிஸ் கஸாலிக்கு தாங்கள் நெருக்குதல் தர மாட்டோம் என அவர் தெளிவுப்படுத்தினார்.
16 ஆவது ஜொகூர் மாநில தேர்தலில் வெறும் தொகுதிகளில் போட்டியிடும் தமது கட்சியின் விருப்பம் குறித்து நேற்று முன்தினம் மந்திரி பெசாரிடம் தாங்கள் தெரிவித்து விட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய முன்னணியின் பங்காளி கட்சி என்ற நிலையில், அந்தக் கூட்டணி போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டார்.
ஆகையால் இந்த விவகாரத்தில் இந்நிலையிலும் எங்களின் கோரிக்கை குறித்து மந்திரி பெசாருக்கு நெருக்குதல் தர மாட்டோம் என அவர் சொன்னார்.
தேசிய முன்னணியின் பங்காளி கட்சியாக சட்டபூர்வமாக பிபிபி அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாக கடந்த ஜனவரி 18 ஆம் தேதி அக்கூட்டணியின் தலைவரும் துணை பிரதமருமான டத்தோஸ்ரீ ஸாஹிட் அமிடி அறிவிப்பு செய்திருந்தார்.
தேசிய முன்னணி பங்காளி கட்சி என்ற நிலையில் அந்தக் கூட்டணியின் வெற்றிக்கு தமது கட்சி என்றுமே துணை நிற்கும் என லோக பாலா தெரிவித்தார்.


