
பினாங்கு மத்திய செபெராங் பிறையில் உள்ள கம்போங் குவாலா ஜூரு பகுதியில், ஜூரு ஆற்றில் அதிகரித்து வரும் கடுமையான மாசுபாடு காரணமாக சுமார் 100 கிளிஞ்சல் வளர்ப்பாளர்களும் மீனவர்களும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் இறால் குளங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் காரணமாக இந்த மாசுபாடு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதன் விளைவாக, ஜூரு ஆற்றில் வளர்க்கப்பட்ட கிளிஞ்சல்கள் மற்றும் மீன்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டதால், மீனவர்களின் வருமானம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முஹைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வில், ஜூரு ஆற்றின் நீர் எப்போதும் கலங்கலாக காணப்படுவதாகவும், அருகிலுள்ள தொழிற்சாலைகள், வடிகால் வாயில்கள் மற்றும் இறால் குளங்களிலிருந்து வெளியேறும் கழிவுகளால் ஆறு மாசடைந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
குவாலா ஜூரு மீனவர்கள் சங்கத் தலைவர் வாஹித் ஒத்மான் கூறுகையில், ஜூரு ஆற்றுடன் இணையும் சுங்கை டெர்ஹாகா பகுதியில் உள்ள தொழிற்சாலைக் கழிவு வாயில் நீண்டகாலமாக மூடப்பட்டிருந்தது. ஆனால், ஒரு வருடத்திற்கு முன்பு மீண்டும் திறக்கப்பட்ட பின்னரே இந்த கடுமையான மாசுபாடு பிரச்சனை தீவிரமடைந்ததாக தெரிவித்தார்.
மேலும், அதிகாலை நேரங்களில் இரசாயனக் கழிவுகள் ஆற்றில் வெளியேற்றப்படுவதால், ஆற்றுநீர் கருமையாக மாறி துர்நாற்றம் வீசுவதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், ஜூரு ஆற்றில் இறந்த கிளிஞ்சல்கள் மற்றும் மீன்கள் நீரின் மேற்பரப்பில் மிதப்பதை மீனவர்கள் கண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


