
1MDB ஊழல் விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்து வரும் மலேசிய தொழிலதிபர் ஜோ லோ, அமெரிக்க அதிபர் டொனால்ட்
டிரம்ப்பிடம் மன்னிப்பு கோரி விண்ணப்பித்ததாக கூறப்படும் அறிக்கை குறித்து மலேசிய அரசாங்கம் கையாண்ட விதம்
‘மந்தமாக’ இருப்பதாக ஜசெக கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் சாடினார்.
1MDB ஊழலின் பின்னணியில் உள்ள இந்த சூத்திரதாரியை மலேசியாவிற்கு நாடு கடத்துவதை உறுதி செய்வதற்காக, உடனடியாக தூதரக வழிகள் மூலம் அதிகாரப்பூர்வ எதிர்ப்பை மலேசியா அரசாங்கம் அனுப்ப வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இவ்வளவு பெரிய ஒரு விவகாரத்தில், இந்நாட்டு அரசாங்கம் மந்தமாகவோ அல்லது தயங்குவதாகவோ தோன்றக்கூடாது என்றார் அவர்.
இந்த விவகாரத்தில் மலேசிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆட்சியபத்தை உடனடியாக அமெரிக்க அரசாங்கத்திற்கு அனுப்ப வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார்.
ஜோ லோ ஒரு அரசியல் பலிகடா அல்ல, ஆகையால் இவர் நாடு கடத்தப்பட்டு மலேசியா சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார்.
நாட்டின் மிகப் பெரிய நிதி ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பை ஒரு பின் வாசல் வழியாக இந்த அரசாங்கம் மாற்றி விடக்கூடாது என அவர் எச்சரித்தார்.
1MDB மற்றும் SRC ஊழலின் பின்னணியில் உள்ளவர்கள், குற்றவாளிகள் அல்லது அதன் மூலம் பயனடைந்தவர்கள் மன்னிப்பு மூலம் தப்பித்துக் கொள்ள வழி தேடினால், அது உலகிற்கு மிகவும் வெட்கக்கேடான ஒரு செய்தியை கொண்டு சேர்க்கும் என அவர் குறிப்பிட்டார்.
‘முதலில் நாட்டை கொள்ளையடியுங்கள், பிறகு மன்னிப்பு கேளுங்கள்’ என்று அவர் கிண்டலாக கூறினார்.
இந்த விவகாரம் குறித்து அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தொடர்பு துறை அமைச்சர் ஃபாமி பாட்சில் கூறியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை வால் ஸ்ட்ரீட் ஜர்னல்
(WSJ) வெளியிட்ட செய்தியில்,ஜோ லோ தமக்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டுகளை கைவிடுவதற்கான முயற்சியாக”அமெரிக்க அதிகாரிகளிடம் மன்னிப்பு விண்ணத்தை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


