
மலேசிய ஊடக மன்றம் (எம்.எம்.எம்) பல்வேறு புகார்கள் உட்பட செய்தி துல்லியம், அனுமதியின்றி புகைப்படங்களைப் பயன்படுத்துதல், சமூக ஒற்றுமையை பாதிக்கும் உள்ளடக்கம் தொடர்பாக மொத்தம் ஏழு புகார்களை இதுவரை பெற்றுள்ளது.
இதில் ஐந்து புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள இரண்டு புகார்கள் தற்போது சரிபார்க்கப்பட்டு வருவதாக தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வையும் மேம்படுத்தும் நோக்கில், அனைத்து புகார்களும் தற்போது எம்.எம்.எம் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பொதுமக்களும், அரசும் எம்.எம்.எம் தளத்தைப் பயன்படுத்தி ஊடகம் தொடர்பான புகார்களை முன்வைக்க நான் வரவேற்கிறேன். அதோடு, இந்த மன்றம் அறநெறியுடனும், பொறுப்புடனும் நடந்துகொள்வதோடு, சுதந்திரமான செய்தியறிக்கையைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதே இதன் பங்கு என்று நான் நம்புகிறேன்” என செய்தியார்களிடம் தியோ தெரிவித்தார்.
முன்னதாக, தலைநகரில் நடைபெற்ற 21வது ஆசிய ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் பொது மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் கலந்து சிறப்பித்தார்.
ஊடகங்களுக்கு எதிரான புகார்கள் முழுமையாக எம்.எம்.எம் மூலம் மட்டுமே கையாளப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த தியோ, விசாரணை மற்றும் வழக்குத் தொடரும் அதிகாரம் சட்ட அமலாக்க அமைப்புகளின் கீழ் இருக்கும் என தெளிவுபடுத்தினார்.
காவல்துறை புகார்களை விசாரிக்கும் அதிகாரம் கொண்டுள்ளது. பின்னர் அவை சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டு, வழக்குத் தொடர்வது உட்பட மேலதிக நடவடிக்கை தீர்மானிக்கப்படும்.
“சட்ட அமலாக்க அதிகாரிகளும் ஊடகத்துறையினரும் பரஸ்பர மரியாதையுடன் செயல்படுவது மிக முக்கியம். இதன் மூலம் செய்தியாளர்கள் தங்கள் கடமையை சரியாக நிறைவேற்ற முடியும்,” என அவர் மேலும் கூறினார்.


