
எதிர்க்கட்சித் தலைவர் பதவி காலியாகிவிட்டதை தொடர்ந்து மக்களவை சபாநாயகரிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் டத்தோஶ்ரீ அமாட் சாம்சுரி மொக்தார் கூறினார்.
இதுவரை எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த ஹம்சா ஜைனுடின் தமது பதவியை காலி செய்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திரங்கானு மந்திரி பெசாருமான அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் குறித்து மக்களவை சபாநாயகருக்கு கடிதம் மூலம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும்படி பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் தாக்கியுடின் ஹசான் பணிக்கப்பட்டுள்ளார் என்றார் அவர்.
இன்று திங்கட்கிழமை இந்த பதவி காலியானது குறித்து கடிதம் மூலம் மக்களை சபாநாயகரிடம் தெரிவிக்கப்படும் என அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த பிப் 13 ஆம் தேதி பெர்சாத்து கட்சியிலிருந்து ஹம்சா நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த பதவி கேள்விக்குறியாக இருந்து வந்தது.
கட்சியிலிருந்து ஹம்சா நீக்கம் செய்யப்பட்டதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஹம்சா உடனடியாக காலி செய்ய வேண்டும் என பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் வலியுறுத்தி வந்தார்.
இருப்பினும் இந்த விவகாரத்தில் பாஸ் கட்சி மெத்தன போக்கை கடைபிடித்து வந்தது.
எதிர் வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்திற்கு முன்னதாகவே புதிய எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் செய்யப்படுவார் என பாஸ் கூறி வந்துள்ளது.


