
அண்மையில் அறிவிக்கப்பட்ட எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் நன்னெறி பாடத்தில்(Moral) A பெற தவறிய 9A பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் உயர் கல்வி பெற வாய்ப்பு அளிக்க வேண்டும் என மஇகா கல்வி குழு தலைவர் டத்தோ ரங்கநாதன் வலியுறுத்தினார்.
அனைத்து பாடங்களிலும் A-க்களை பெற்று மோரல் பாடத்தில் மட்டும் A பெற தவறிய சுமார் 60 இந்திய மாணவர்கள் மஇகா கல்வி குழுவிடம் புகார் செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கடுமையான பாடங்கள் அனைத்திலும் A சிறப்பு தேர்ச்சி பெற்று இந்த மோரல் பாடத்தில் மட்டும் ஏன் A பெறவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கான விளக்கத்தை கல்வி அமைச்சர் தர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
10A-க்கள் பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷனில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கடந்த சில தினங்களுக்கு முன்பு வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் கடுமையாக படித்து அனைத்து பாடங்களிலும் A-க்களை பெற்று மோரல் பாடத்தில் மட்டும் இந்த மாணவர்கள் A பெறாதது வருத்தத்தை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இது யாருடைய தவறு, ஆசிரியரை குறை கூறுவதா என அவர் வினவினார்.
இவர்களில் பெரும்பாலோர் பி40 பிரிவை சேர்ந்த மாணவர்களாகும். மோரல் பாடத்தில் மட்டும் A பெறாததால் இந்த மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பு பாதிக்கப்படும் என அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகையால் இம்முறை இந்த மாணவர்களுக்கு கல்வி அமைச்சு மெட்ரிகுலேஷனில் வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அதை வேளையில் மோரல் பாடத்திட்டத்தை கல்வி அமைச்சு மறுபரிசலனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் எஸ்பிஎம் தேர்வு எழுதும் இந்திய மாணவர்கள் இந்த பிரச்சனையை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த பிரச்சனைக்கு கல்வி அமைச்சு ஒரு நிரந்தர தீர்வை காண வேண்டும் என டத்தோ நெல்சன் வலியுறுத்தினார்.


