Monday, April 27, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஜனநாயகத்தின் வலிமை – அமலாக்கத்தில் நேர்மையும் பொறுப்பும் அவசியம்!

SPRM மீது எழும் கேள்விகள் ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் – நூருல் இஸா அன்வார்

ஒரு ஜனநாயகத்தின் வலிமை என்பது சட்டங்கள் உருவாக்கப்படுவதால் மட்டுமே அளவிடப்படுவதில்லை; அந்த சட்டங்கள் எவ்வாறு நேர்மையுடனும் பொறுப்புடனும் அமல்படுத்தப்படுகின்றன என்பதிலும், அவற்றை நடைமுறைப்படுத்தும் அமைப்புகளின் நம்பகத்தன்மையிலும் அது அளவிடப்படுகிறது என்று PKR கட்சியின் துணைத்தலைவர் நூருல் இஸா அன்வார் தனது செய்தி அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

அவரது கூற்றுப்படி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) குறித்து மக்கள் முன்வைக்கும் கவலைகள் அந்த அமைப்பை குறை கூறுவதற்காக அல்ல; மாறாக ஜனநாயக அடிப்படைகளை பாதுகாக்கும் நோக்கத்திலேயே இருப்பதாக புரிந்துகொள்ள வேண்டும்.

அரசு நிறுவனங்கள் எந்த சூழ்நிலையிலும் மக்களுக்கும் நாட்டிற்கும் சேவை செய்வதே தங்களது முதன்மை நோக்கம் என்பதை தெளிவாக நிரூபிக்க வேண்டும் என்றும், அவை சில தனிநபர்கள் அல்லது குறிப்பிட்ட குழுக்களின் நலனுக்காக செயல்படுவதில்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையே அரசின் கொள்கைகள், சட்ட அமலாக்கம் மற்றும் நிர்வாக செயல்பாடுகளின் அடித்தளம் என்றும் அவர் கூறினார். “சரியானதைச் செய்வது மட்டும் போதாது; அரசு சரியானதைச் செய்கிறது என்ற நம்பிக்கையும் மக்களிடையே உருவாக வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

SPRM-க்கு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் ஊழலை எதிர்க்கும் சக்திவாய்ந்த கருவியாக பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் சில சமயங்களில் அது அரசியல் போட்டிகள் அல்லது தைரியமாக கருத்து தெரிவித்தவர்களை குறிவைக்கும் கருவியாக பயன்படுத்தப்படுகிறது என்ற எண்ணம் உருவாகக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

சட்ட அமலாக்க நடவடிக்கைகள் அளவுக்கு மீறியதாக, வெளிப்படையற்றதாக அல்லது அச்சுறுத்தலாக மாறும் போது அது நீதி நிலைநாட்ட உதவாது; மாறாக ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளையே பலவீனப்படுத்தும் அபாயம் உள்ளது என்று அவர் எச்சரித்தார்.

RM1.1 பில்லியன் மதிப்புள்ள அரசு–ARM Holdings ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் அல்லது சட்டவிரோதமாகப் பெற்ற நிதிகளை மீட்டெடுத்து தேசிய நிதியை பாதுகாக்கும் நடவடிக்கைகள் ஆகியவை சட்டபூர்வமான காரணங்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் சில விசாரணைகள் கடுமையான முறையில் நடத்தப்படுவது குறித்து எழும் கேள்விகளையும் கவனிக்க வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.

குறிப்பாக, தனிநபர்களின் வீட்டு முகவரிகள் பொதுவெளியில் பரவுமாறு வெளியிடப்படுவது நடைமுறை விதிகளின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவை நேர்மை, சமநிலை, அளவுத்தன்மை, தனியுரிமை மரியாதை மற்றும் நிறுவன பொறுப்புணர்வு ஆகியவற்றை பிரதிபலிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

சட்டத்தின் முன் யாரும் விடுபட முடியாது என்றாலும், பெரும் அளவிலான பொது நிதி சம்பந்தப்பட்டிருக்கும்போது, அந்த நிதி எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது மற்றும் அதை விசாரிக்கும் அமைப்புகள் எவ்வாறு பொறுப்புக்குட்படுகின்றன என்பதையும் மக்களுக்கு அறியும் உரிமை உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

ஊழலை எதிர்க்கும் முயற்சியின் நம்பகத்தன்மை பொதுமக்களின் நம்பிக்கையில் தங்கியிருக்கிறது. அமலாக்க நிறுவனங்கள் நியாயமாகவும், பொறுப்புடனும், வெளிப்படையாகவும் செயல்படுகின்றன என்ற நம்பிக்கை உருவானால் மட்டுமே அந்த முயற்சிக்கு உண்மையான ஆதரவு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், தற்போது பேசப்பட்டு வரும் “கார்ப்பரேட் மாபியா” குறித்த குற்றச்சாட்டுகள், குறிப்பாக சில ஆணையர்கள் தனிப்பட்ட பங்குகளை வைத்திருப்பது குறித்த கேள்விகள் குறித்து தெளிவான பதில்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். பதிலின்றி விடப்பட்ட குற்றச்சாட்டுகள் நம்பகத்தன்மை குறைபாட்டை உருவாக்கி, ஊழலை எதிர்க்கும் தேசிய முயற்சிகளையே பாதிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் இன்று அல்லது நேற்று உருவானவை அல்ல; பல ஆண்டுகளாக கூறப்பட்டு வந்தவை என்றாலும் தற்போது அவை அதிக கவனத்தை பெற்றுள்ளன. எனவே அவற்றை வேரறுக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான ஒரு தீர்வாக, SPRM மீது பாராளுமன்ற கண்காணிப்பை வலுப்படுத்துவது முக்கியமான நடவடிக்கையாக இருக்கலாம் என்று அவர் கூறினார். பாராளுமன்றத்திற்கு வழங்கப்படும் காலமுறை அறிக்கைகள் மூலம் மக்கள் பிரதிநிதிகள் SPRM செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்யலாம். அதேசமயம் பொது கணக்குக் குழு (PAC) அல்லது பாராளுமன்றத் தெரிவுக் குழுக்கள் (PSC) போன்ற அமைப்புகள் கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் அமலாக்க முடிவுகளை ஆய்வு செய்ய முடியும்.

இத்தகைய கண்காணிப்பு விசாரணைகளில் தலையீடு செய்யாது; மாறாக வெளிப்படைத்தன்மையையும் பொதுநம்பிக்கையையும் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

SPRM மீது பாராளுமன்ற கண்காணிப்பை வலுப்படுத்துவது ஊழல் எதிர்ப்பு முயற்சிக்கு எதிரானது அல்ல; மாறாக அதை மேலும் வலுப்படுத்தும் ஒரு நடைமுறை என்றும் அவர் கூறினார்.

இந்த வகையான அமைப்பு சார்ந்த பரிந்துரைகளை தாம் பலமுறை முன்வைத்துள்ளதாகவும், அவற்றை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து ஆதரிப்பதாகவும், ஊழல் ஒழிப்பிற்கான தனது உறுதியான நிலைப்பாட்டை நூருல் இஸா அன்வார் தனது அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular