
அரசியல் சர்ச்சைகளுக்கு இடமளிக்காமல் பொருத்தமான நேரத்தில் வெளியிடப்படும் – டத்தோஸ்ரீ ரமணன்
செனாவாங், ஜூலை 28 – இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த புதிய அறிவிப்பு ஒன்றை அரசாங்கம் விரைவில் வெளியிடவுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
எனினும், அரசியல் விமர்சனங்களுக்கு இடமளிக்காமல், சரியான நேரத்தில் மட்டுமே அந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில்
மித்ரா திட்டங்களின் செயலாக்கப் பணிகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய சமூகத்திற்கு பெரும் பயனளிக்கும் திட்டம் ஒன்று இறுதிக்கட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
“இந்திய சமூகத்திற்கான மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று தயாராக உள்ளது. ஆனால், அதை தற்போது வெளியிட விரும்பவில்லை. அதற்கு இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியுள்ளது,” என்றார்.
தற்போதைய தேர்தல் சூழலை காரணமாகக் கொண்டு, மக்கள் நலத் திட்டங்களைக்கூட அரசியல் கண்ணோட்டத்தில் விமர்சிக்கும் நிலை உருவாகியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“இப்போது அந்த அறிவிப்பை வெளியிட்டால், தேர்தலை முன்னிட்டு அரசியல் நோக்கத்திற்காக இதைச் செய்கிறார்கள் என்று சிலர் தவறாகப் புரிந்துகொள்ளவோ அல்லது விமர்சிக்கவோ வாய்ப்புள்ளது. அதுபோன்ற தேவையற்ற சர்ச்சைகளுக்கு இடமளிக்க விரும்பவில்லை. எனவே, பொருத்தமான நேரத்தில் அந்த அறிவிப்பை வெளியிடுவோம்,” என்று ரமணன் தெரிவித்தார்.
நாட்டில் தொடர்ச்சியாக ஏதேனும் ஒரு பகுதியில் தேர்தல்கள் நடைபெற்று வருவதால், அதனை காரணமாகக் கொண்டு மக்கள் நலத் திட்டங்களை தாமதப்படுத்த முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
“நமது நாட்டில் ஏதாவது ஒரு பகுதியில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அதற்காக இந்திய சமூகத்தின் நலனுக்கான திட்டங்களை நிறுத்தி வைக்க முடியாது. சரியான நேரம் வரும்போது, இந்திய சமூகத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும் அந்த முக்கிய அறிவிப்பை நிச்சயமாக வெளியிடுவோம்,” என்றார்.
அந்த அறிவிப்பு குறித்த கூடுதல் விவரங்களை தற்போது வெளியிட அவர் மறுத்தாலும், அது இந்திய சமூகத்தின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் முக்கிய முயற்சியாக அமையும் என டத்தோஸ்ரீ ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.


