
பத்து மலை மின்னியல் படிக்கட்டு விரைவில் நிர்மாணிக்கப்பட வேண்டும் என சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் விரைந்து செயல்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நேற்று பத்து மலை நிர்வாக அலுவலகத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் சொன்னார்.
இந்த கூட்டத்தில் இலக்கியவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ, ஆலய தலைவர் டான்ஸ்ரீ நடராஜா, அறங்காவலர் டத்தோ சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மின்னியல் படிக்கட்டு விவகாரம் தொடர்பாக மாநில அரசாங்கம் மற்றும் பத்து மலை நிர்வாகம் ஆகிய தரப்பினருக்கு இடையே சர்ச்சைகள் மூண்டு வந்தன.
இருப்பினும் இரு தரப்பினருக்கு இடையே சுமுகமான பேச்சு வார்த்தையை தொடர்ந்து நேற்று இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.
‘கலகம் பிறந்தால் தான் வழி பிறக்கும்’ என்பதற்கு இணங்க இந்த மின் படிக்கட்டு பிரச்சனைக்கு சமூக தீர்வு காணப்பட்டதாக பாப்பராய்டு செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த மின் படிக்கட்டு நிர்மாணிப்பு மிக அவசியமாகும். காரணம் இங்கு வரும் பெரும்பாலோர் படிக்கட்டுகளில் நடந்து சென்று முருகப்பெருமானை தரிசிக்க சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகையால் இந்த மின் படிக்கட்டு நிர்மாணப்பு குறித்து சிலாங்கூர் மந்திரி பெசாரிடம் தாம் பேச்சுவார்த்தை நடத்தி விட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.


