Friday, January 16, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ் மற்றும் சீன பள்ளிகளுக்கான நிதி ஒடுக்கீடு குறித்து கேள்வி எழுப்பாதீர்!

சீன தேசிய வகைப் பள்ளிகள் (SJKC) மற்றும் தமிழ் தேசிய வகைப் பள்ளிகள் (SJKT) ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதை கேள்விக்குள்ளாக்கிய பெர்காசா அமைப்பின் அறிக்கையை மலேசிய மக்கள் முட்போகு கட்சி (பிபிபி) இளைஞர் பகுதி கடுமையாக எதிர்க்கிறது.

மலேசிய பிபிபி இளைஞர் தலைவர் சத்தியா சுதாகரன், இத்தகைய அறிக்கைகள் குறுகிய மனப்பான்மையையும், நியாயமற்ற சிந்தனையையும் வெளிப்படுத்துவதோடு, நாட்டின் பன்முக சமூக ஒற்றுமையை பாதிக்கும் அபாயத்தையும் கொண்டுள்ளன என தெரிவித்தார்.

கிராமப்புறங்களில் உள்ள சில மலாய் பள்ளிகள் இன்னும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதும், அவற்றை மேம்படுத்த நிதி உதவி தேவைப்படுவதையும் எடுத்துக்காட்டுவதில் உள்ள நோக்கம் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், அதனை காரணமாகக் கொண்டு தமிழ் மற்றும் சீன பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை கேள்விக்குள்ளாக்குவது தேவையற்றதும், ஆதாரமற்றதும், இனவாதப் போக்கையும் பிரதிபலிப்பதாகும் என அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்ட பள்ளிகள் எவை என்பதை தெளிவான உண்மைகள் மற்றும் தரவுகளுடன் முன்வைத்து, அவற்றுக்காக அரசிடம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை கோர வேண்டுமே தவிர, மற்ற பள்ளிகளின் உரிமைகளை சந்தேகிக்கக் கூடாது,” என அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

கல்வி விவகாரங்கள் இன அடிப்படையில் பார்க்கப்படக்கூடாது என்றும், கல்வி என்பது கூட்டாட்சி அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்ட ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்றும் சத்தியா நினைவூட்டினார். SJKC மற்றும் SJKT பள்ளிகள் தேசிய கல்வி அமைப்பின் ஓர் அங்கமாக இருந்து, சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலிருந்தே மனித மூலதன வளர்ச்சி, தேசிய அடையாள உருவாக்கம் மற்றும் சமூக நிலைத்தன்மைக்கு முக்கிய பங்களிப்பு வழங்கி வருகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை கேள்விக்குள்ளாக்கும் முயற்சிகள், கோடிக்கணக்கான மலேசியர்களின் பங்களிப்பையும் உரிமைகளையும் மறுக்கும் செயலைப் போன்று இருப்பதாகவும் அவர் கூறினார்.

உள்நாட்டின் பின்தங்கிய பகுதிகளில் உள்ள சீர்கெட்ட பள்ளிகள் குறித்து கருத்து தெரிவித்த பிபிபி இளைஞர் அமைப்பு, அந்த விவகாரம் மற்ற கல்வி பிரிவுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை மறுப்பதற்கான காரணமாக பயன்படுத்தப்படக் கூடாது எனக் கூறியது. மாறாக, இன உணர்ச்சிகளைத் தூண்டும்
“பாரபட்சம்” என்ற கதைமாந்திரம் உருவாக்கப்படாமல், அரசு இரு பிரச்சினைகளையும் ஒரே நேரத்தில் தீர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, கல்வி தொடர்பான பொதுக் கருத்துகளை வெளியிடும் போது, குறிப்பாக அரசு அல்லாத அமைப்புகள் அதிக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என பிபிபி இளைஞர் அமைப்பு வலியுறுத்தியது.

கல்வி விவகாரங்கள் முதிர்ச்சியுடனும், உண்மைகள் அடிப்படையிலும், தேசிய நலனை மையமாகக் கொண்டும் விவாதிக்கப்பட வேண்டும்; குறுகிய அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் கூறினார்.

பன்முக இனங்களை உள்ளடக்கிய அரசியல் கட்சியாக பிபிபி, தேசிய பள்ளிகள், SJKC மற்றும் SJKT உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் நியாயமான மற்றும் சமச்சீர் நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து ஆதரிப்பதாகவும், ஒன்றுபட்ட, முன்னேற்றமான மற்றும் உள்ளடக்கமான நாட்டின் எதிர்காலத்தை உறுதி செய்வதே தனது நிலைப்பாடு என்றும் மீண்டும் வலியுறுத்தியது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular