
குளுஙாங் ஜாலான் ஹாஜி மானான் தமிழ் பள்ளி முன்னாள் மாணவர்களின் மலரும் நினைவுகள் ஒன்று கூடும் நிகழ்வு கடந்த 13 டிசம்பர் 2025-ல் அப்பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த ஒன்று கூடல் நிகழ்ச்சி இரவு 11 மணிக்கு இனிதே முடிவுற்றது.
இந்த ஒன்று கூடும் நிகழ்வில் இப்பள்ளியின் 1986 ஆம் ஆண்டு 6 ஆம் வகுப்பு மஞ்சள் மற்றும் பச்சை வகுப்புகளைச் சார்ந்த பேட்ஜ் 79-ன் 63 மாணவர்களில் 42 பேர் கலந்து கொண்டனர்.

தனிப்பட்ட காரணங்களுக்காக 11 மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை.
இவர்களில் 10 பேர் மரணமடைந்து விட்டனர்.
முன்னாள் தலைமை ஆசிரியர் ஆசீர்வாதம், மூத்த ஆசிரியர் ஜெயராமன், தமிழ் ஆசிரியர் திருமதி சந்திரா, திருமதி மகேஸ்வரி, ஆசிரியர்கள் ஆறுமுகம், முத்துராஜா மற்றும் செல்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.
காலை சிற்றுண்டிக்கு பிறகு 10.30-க்கு ஒன்று கூடல் நிகழ்ச்சியை தொடங்கியதாக இந்த நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த புவனேஸ்வரி
(தமிழச்சி) கூறினார்.
அனிதா பழனியப்பனின் கடவுள் வாழ்த்துடன் இந்த நிகழ்ச்சி இனிதே தொடங்கியதாக அவர் சொன்னார்.

ஏற்பாட்டு குழு தலைவர் பழனிகுமார் ராமசாமியின் வரவேற்பு உரைக்க பிறகு தலைமை ஆசிரியர் ஆசீர்வாதம் தலைமை உரை ஆற்றினார்.
ஆசிரியர்கள் செல்வம், ஜெயராமன், ஆறுமுகம், முத்துராஜா மற்றும் ஆசிரியைகள் மகேஸ்வரி மற்றும் சந்திரா சிறப்புரை ஆற்றி முன்னாள் மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாக அவர் குறிப்பிட்டார்.
தங்களது கடந்த கால பள்ளி வாழ்க்கை மற்றும் நடப்பு குடும்ப வாழ்க்கை உட்பட பல விவகாரங்கள் குறித்து அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.
காலங்கள் கடந்து போனாலும் பள்ளி வாழ்க்கை மறக்க முடியாதவை என்ற உண்மையை இவர்கள் அனைவரும் பகிர்ந்து கொண்டனர்.
ஆசிரியர் முத்து ராஜா தமது உரையின் போது இந்த நிகழ்வின் அறிவிப்பாளர் புவனேஸ்வரி பெருமாள் அவ்வப்போது ‘தோழர்’ என்ற சொல்லை அவ்வப்போது பயன்படுத்திய அந்த சொல்லுக்கு அருமையான விளக்கத்தை தந்தார்.
முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்வுக்கு எங்களை அழைத்து எங்களுக்கு மதிப்பளித்த முதல் பேட்ஜ் மாணவர்கள் இவர்கள் தான் என இந்நிகழ்வில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் கூறினார்.
அதே வேளையில் தங்களின் மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்குவதைக் கண்டு தாங்கள் பெருமை அடைவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

நண்பகல் உணவு, தேநீர் மற்றும் இரவு உணவு ஆகியவற்றுடன் இரவு 11 மணிக்கு அனைவரும் விடை பெற்றனர்.
இந்த நிகழ்வில் அறிவிப்பாளர் புவனேஸ்வரி பெருமாள் படைத்த கவிதை……
பேசாமல் சில நாட்கள்…
பார்க்காமல் பல வருடங்கள்…
KELAS TAMBAHAN என்ற பெயரில்
புளிச்சங் காய் திருடி தின்றது முதல்…
மயிலிறகு சந்தையில் மனசு உடைந்து போனது…
பள்ளி முடிந்து பஸ்க்கு காத்திருக்கும் நேரத்தில்…
தூணுக்கு தூண் தாவி…
BELON ACA விளையாடியது தான் எப்படி மறக்க முடியும்?
தொலைத்தது பள்ளியை மட்டுமல்ல
எங்கோ… தொலைதூரம் வாழும் கூட்டாளியையும் தான்….
பட்டப் பெயர் வைத்து அழைத்த காலம் மலையேறி போனது…
வாங்க போங்க வென வேற்று நபரை அழைப்பது போல் அழைக்கும் தருணத்தில்..
உன் மனசு கேட்கத்தான் சொன்னது…
நண்பா என்னை மறந்துட்டாயா…
தோழி என்னை மறந்துட்டாயா…
நட்பே நீ என்னை நேசிக்கவில்லையான்னு……
இன்று மீண்டும் கூடினோம்…
இரவு வானில் நட்சத்திரங்கள் போல…
ஒவ்வொரு முகமும் ஒளிர்கிறது…
நினைவுகள் நெஞ்சில் மலர்கிறது…
தொடர்ந்து எங்களில் ஒருவர் அன்புத் தோழர் பழனி குமார் அவர்களை வரவேற்புரையாற்றிட அன்புடன் அழைக்கிறோம் பலத்த கர ஓசையுடன்…..
-புவனேஸ்வரி பெருமாள்


