
இங்குள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்திலிருந்து புதிய நேரடி விமான சேவைகளை பாத்தேக் ஏர் தொடங்கியது.
கிள்ளான் பள்ளத்தாக்கு பயணிகளுக்கு சுபாங் ஒரு நவீன மற்றும் எளிதான மாநகர் நுழைவாயல் மையமாக விளங்குவதை இந்த விரிவாக்கம் காட்டுகிறது.
இதன் மத்திய இருப்பிடம் மற்றும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள், வர்த்தக மற்றும் சுற்றுப்பயணிகளுக்கு சுபாங் விமான நிலையம் ஒரு முக்கிய மையமாக விளங்கி வருகிறது.
இங்கிருந்து சிங்கப்பூர் மற்றும் ஜாக்கர்த்தா(8 டிசம்பர் 2025), ஜொகூர் பாரு(11 டிசம்பர் 2025),
மற்றும் லங்காவி (12 டிசம்பர் 2025) நகரங்களுக்கான சேவைகள் தொடங்கியது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 1-ன் மாற்று வழியாக இந்த புதிய சேவைகள் அமைகிறது.

அதே வேளையில் சுபாங் விமான நிலையத்தின் உருமாற்று திட்டத்திற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இந்த விரிவாக்கம் உதவுகிறது.
சுற்றுலாத்துறை வளர்ச்சி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்த சுபாங் ஒரு துடிப்பான மையமாக துரித வளர்ச்சி கண்டு வருகிறது.
தற்போது பாத்தேக் ஏர் சுபாங்கிலிருந்து பினாங்கு, கோத்தா பாரு, கோத்தா கினபாலு,கூச்சிங் மற்றும் பேங்காக் ஆகிய நகரங்களுக்கு சிறகடித்து வருகிறது.
இந்த புதிய வழித்தட சேவைகள் மலேசியாவில் பல இடங்களுக்கு பயணிகள் எளிதாகவும் வசதியாகவும் பயணம் செய்ய உதவுகிறது.
இதனிடையே கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பயணிகள் தடையின்றி பயணிக்க சுபாங் விமான நிலையம் துரித வளர்ச்சி கண்டு வருவதாக பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.

சுபாங் விமான நிலையத்தின் உருமாற்ற அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பாத்தேக் ஏர் இந்த விமான நிலையத்திலிருந்து அதிகமான நேரடி விமான சேவைகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டை வரவேற்கும் வகையில் அதிகமான அனைத்துலக சுற்று பயணிகள் நாட்டிற்குள் நுழைய இந்த புதிய வழித்தடங்கள் மிக அவசியம் என்றார் அவர்.
இதனிடையே பாத்தேக் ஏரின் இந்த புதிய நேரடி விமான சேவைகள் மிகவும் வரவேற்றத்தக்க ஒன்று என மலேசிய சுற்றுலா துறையின் துணை இயக்குனர் சாமுவேல் லீ கூறினார்.
இந்த புதிய வழித்தட சேவைகளின் மூலம் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதார துறைகள் மேலும் வலுப்பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சுற்றுப்பயணிகளுக்கு தடையற்ற பயணம் மற்றும் வசதியை ஏற்படுத்த இந்த புதிய வழித்தடங்கள் துணை புரிவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் ஆசிய நாடுகளுக்கு ஒரு நுழைவாயிலாக மலேசியா விளங்க இந்த புதிய வழித்தடங்கள் உதவும் என அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவின் கலாச்சார வளங்கள் மற்றும் இயற்கை அழகுகளை அனைத்துலக சுற்றுப்பயணிகள் கண்டு களிக்க இந்த புதிய வழித்தடங்கள் உதவுகிறது என அவர் தெரிவித்தார்.

இதனிடையே 2025 சிலாங்கூருக்கு வருகை புரியும் ஆண்டின் இலக்கை அடைய பாத்தேக் ஏர் பொருத்தமான தருணத்தில் இந்த புதிய சேவைகளை தொடங்கியுள்ளதாக சிலாங்கூர் சுற்றுலாத் துறையின் தலைமை செயல்முறை அதிகாரி சுவா யூ லிங் கூறினார்.
2025 மூன்றாம் காலா ஆண்டில் 64 லட்சம் சுற்றுப்பயணிகள் சிலாங்கூர் மாநிலத்திற்கு வருகை தந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தோனேசியாவிற்கான புதிய நேரடி விமான சேவைகளின் மூலம் சிலாங்கூரில் மருத்துவ சுற்றுலா சந்தை வலுபெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இப்ராந்தியத்தில் சுற்றுலாத் துறையை வலுப்பெற செய்ய சிலாங்கூர் சுற்றுலாத்துறை பாத்தேக் ஏருடன் தொடர்ந்து ஒத்துழைத்து வரும் என அவர் குறிப்பிட்டார்.


