
16 ஆவது பொதுத் தேர்தலுக்கு தயாராவதில் கவனம் செலுத்துங்கள், அதை விடுத்து கட்சித் தலைவரை வீழ்த்தும் சதியில் அல்ல என பெர்சாத்து கட்சியின் மலாய்காரர்கள் அல்லாதவர் பிரிவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் நினைவுறுத்தினார்.
மேலும் மழைக்காலம் நெருங்குவதால் மக்களுக்கு உதவ நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார் அவர்.
ஆனால் கட்சியிலுள்ள குறிப்பிட்ட சில தலைவர்கள் கட்சித் தலைவரை வீழ்த்தும் சதி திட்டத்தில் கவனம் செலுத்தி வருவதாக அவர் சாடினார்.
இது பொறுப்பற்ற செயல் மட்டுமின்றி, கட்சியின் போராட்டத்திற்கு செய்யும் துரோகம் என அவர் குறிப்பிட்டார்.
பெர்சாத்து கட்சியை பிளவுபடுத்த கட்சிக்குள் மற்றும் கட்சிக்கு வெளியே மேற்கொள்ளப்பட்டு வரும் சதி நடவடிக்கை என அவர் சுட்டிக்காட்டினார்.
கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடி யாசின் கட்சிக்கு ஆற்றிய தியாகத்தை யாரும் மறந்து விடக்கூடாது என்றார் அவர்.
டான்ஸ்ரீ முஹிடின் ஆட்சிக் காலத்தில் இவர்களில் பலர் அரசாங்க பதவிகளில் இருந்துள்ளனர் என்பதை இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என அவர் சொன்னார்.
இப்பொழுது கட்சியின் போராட்ட காலத்தில் கட்சியின் தலைமைத்துவத்திற்கு இவர்கள் ஆதரவு தர தவறிவிட்டனர் என அவர் தெரிவித்தார்.
கட்சித் தலைவரை கவிழ்க்கும் சதி செயல்களில் இவர்கள் தீவிரம் காட்டி வருவதாக அவர் சாடினார்.
முதுகில் குத்தும் அரசியல் கலாச்சாரத்தை நிறுத்திக் கொண்டு கட்சியை வலுப்படுத்த முன் வரும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
இவர்களின் சதி நடவடிக்கைகளால் கட்சி வலிமையை இழக்கும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
கட்சியின் முஸ்லிம் அல்லாதவர்கள் பிரிவு கட்சித் தலைவர் டான்ஸ்ரீ முஹிடினுக்கு பக்கபலமாக இருக்கும் என அவர் உறுதி அளித்தார்.
அடுத்த பொது தேர்தலுக்கு தயாராகவும் மற்றும் மழைக்காலத்தில் மக்களுக்கு உதவ தயார் நிலையில் இருக்கும் மட்டுமே தற்போது நாம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
பெர்சாத்து கட்சி வலிமை அடைந்து அடுத்த பொதுத் தேர்தலில் ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் நாம் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என டத்தோஸ்ரீ சஞ்சீவன் கேட்டுக்கொண்டார்.


