
நமது தொழிலில் பல சவால்கள் இருந்தாலும் மன வலிமையுடன் அதனை
எதிர்கொண்டால் நாம் நமது இலக்கை அடைய முடியும் என கூறுகிறார்
விமான இன்ஜினியரான ஷாலினி ராஜூ.
பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப் பள்ளியில் ஆரம்பக்
கல்வியைத் தொடங்கி இன்று ஏர் ஆசியாவின் துணை நிறுவனமான
எடிஇ விமான பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு நிறுவனத்தில் விமான
இன்ஜினியராக உயர்ந்துள்ள முதல் இந்திய பெண்மணி இவர்தான்.
வாழ்க்கையில் ஓர் உயர்ந்த நிலையை அடைய தமிழ்க் கல்வி ஒரு
தடையல்ல என்பதை கூறிக்கொள்வதில் தாம் பெருமை அடைவதாக அவர்
சொன்னார்.
தம்மையும் தமது மூத்த சகோதரி காஞ்சனாவையும் தமது தந்தை
பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப் பள்ளியில் ஆரம்பக் கல்வியை
தொடங்கச் செய்தார்.
தமது மூத்த சகோதரி காஞ்சனாவும் தம்மைப் போல் ஒரு விமான
இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார் என்பதை கூறுவதில் நான் பெருமை
அடைகிறேன்.
பெட்ரோனாஸில் ஒரு சிவில் இன்ஜினியராக பணிபுரிந்த தமது தந்தை
எங்களின் இடைநிலை கல்வியை முடித்ததும், லண்டனில் உள்ள சிட்டி
ஆப் பிரிஸ்டல் கல்லூரியில் EASA Aircraft Maintenance Engineering,
Avionics Trade துறையில் மேற்கல்வியை தொடர அனுப்பி வைத்தார்.
பிறகு லண்டனில் University of South Wales,Cardiff,BSc (Hons)
Aircraft Engineering and Maintenance Systems முதல்
நிலையில் தாம் தேர்ச்சி பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
லண்டனில் எனது உயர் கல்வியை முடித்துக் கொண்டு ஜூலை 2010-
ல் நான் நாடு திரும்பினேன்.
அந்நேரத்தில் ஓர் இளம் பட்டதாரி நான்.2010 செப்டம்பரில் ஏர்
ஆசியாவில் நேர்முகப் பேட்டிக்கு நான் சென்றேன்.
என்னை நேர்முகப் பேட்டி செய்த அலோசியஸ் ஜோனி என்னை உடனே
வேலைக்கு அமர்த்திக் கொண்டார்.2010 அக்டோபரில் ஏர் ஆசியாவில்
நான் இணைந்தேன்.
என்னை நேர்முகப் பேட்டிக்குப் பிறகு உடனே வேலைக்கு
அமர்த்திக் கொண்ட அவருக்கு இவ்வேளையில் நான் நன்றி கூறக்
கடமைப்பட்டுள்ளேன்.

சவால்களை சந்தித்தேன்… சாதித்தேன்!
ஒரு பெண்மணி விமான இன்ஜினியராகப் பணிபுரிவது எளிதான
ஒன்றல்ல. ஆண்கள் ஆதிக்கம் கொண்ட துறையில் பெண்கள் பல
இன்னல்களை எதிர்நோக்கக் கூடும். இதனால் மன அழுத்தம், மன
உளைச்சல் போன்ற நிலைகளுக்கு தள்ளப்படுகிறோம்.
இவற்றையும் கடந்து மன வலிமையுடன் பணியைத் தொடர்ந்தால்தான்
நமது இலக்கை நாம் அடைய முடியும்…!இந்த காலகட்டத்தில் எடிஇ(ஹனுநு)
நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி மகேஷ் குமார் எனக்கு
நல்ல ஆலோசனைகளை வழங்கி வந்தார். இவரின் ஆலோசனைகள்
எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
பயணிகள் விமானியை நம்பியிருக்கின்றனர்.விமானி என்னை
நம்பியிருக்கிறார்..!
ஒரு விமானம் வானத்தில் சிறகடிக்கும் போது பாதுகாப்பாக தரையிறங்க
அதில் பயணிக்கும் பயணிகள் அந்த விமானியை முழுமையாக நம்பி
பயணிக்கின்றனர்…

ஆனால் அந்த விமானம் பாதுகாப்பாக பறந்து தரை இறங்க என்னைப்
போன்ற விமான இன்ஜினியரைத் தான் நம்பி அந்த விமானி விமானத்தை
செலுத்துகிறார்.
வானத்தில் பறக்கும் ஒரு விமானம் தொழில்நுட்பக் கோளாறின்
காரணத்தினால் தரையிறங்கினால், அந்த விமானத்தை பழுது பார்த்து மீண்டும் பறக்க செய்வது சாதாரண ஒன்றல்ல… அந்நேரத்தில் என்னை
நம்பியிருக்கும் அந்த விமானிக்கு நான் தான் நம்பிக்கை நட்சத்திரம்…!
அந்நேரத்தில் எனது அனுமதியின்றி அந்த விமானம் பறக்க
அனுமதிக்கப்படாது என்பதில் நான் மன உறுதியுடன் இருப்பேன்
என்பதுதான் உண்மை…
இவை அனைத்தையும் கடந்து இன்று தரப் பாதுகாப்பு உத்தரவாத
இன்ஸ்பெக்டராக நான் பதவி உயர்வு அடைந்துள்ளேன்.
விமான இன்ஜினியராக பதவிக்கு நேர்முகப் பேட்டிக்கு வருவோரை
நான் தான் பேட்டி எடுத்து முடிவு செய்ய வேண்டும்..
இந்த கால கட்டத்தில் நேர்முகப் பேட்டிக்கு வரும் ஒவ்வொரு
வேட்பாளரும் தம்மை ஒரு கடவுளாக நம்பி இருப்பார்… இவர்களை விமான
இன்ஜினியராகத் தேர்வு செய்துவிட்டால் அவர்களுக்கு நான் தான் கடவுள்
என்பது உண்மை. ஒரு காலக் கட்டத்தில் நானும் இந்த நிலையில் இருந்தேன்
என்று நினைத்துப் பார்க்கையில் மனம் நெகிழ்கிறது.
எது எப்படி இருப்பினும் விமான பயணிகளின் பாதுகாப்பே எனது
பிரதானம்.. உந்தன் எதிர்கால நாயகி நீதான் என்பது எனது அன்புத்
தந்தையின் தாரக மந்திரம்..
உந்தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என்பது உந்தன்
உரிமையாகும்..என எனது தந்தை கூறுவார்.
எனது அன்புத் தந்தை ராஜூ மற்றும் அன்புத் தாயார் மல்லிகா எனது
வாழ்க்கையின் இந்த வளர்ச்சிக்கு அவர்களே வழிகாட்டி..


