
தேசியக் கொடியை தீய நோக்கத்தில் தலைகீழாக கட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
இது தேசிய ஒற்றுமைக்கு ஊரு விளைவிக்கும் என்பதால் இந்த விவகாரத்தில் அரசாங்கம் அமைதியாக இருக்காது என அவர் சொன்னார்.
தேசியக் கொடி தலை கீழாக தொங்கவிடப்பட்ட சம்பவம் குறித்து இன்று மக்களவையில் ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
அதே வேளையில் எந்தவொரு நோக்கமுமின்றி தேசியக் கொடி தலைகீழாக கட்டப்பட்டால், அதை அப்படியே விட்டு விட முடியாது என்றார் அவர்.
இந்த விவகாரத்திலும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே தேசியக் கொடி தலைகீழாக தொங்கவிடும் சம்பவம் குறித்து மக்கள் புகார்களை செய்ய JPNIN வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
ஆகையால் இந்த சம்பவங்கள் குறித்து மக்கள் எளிதில் புகார் செய்யலாம் என அவர் தெரிவித்தார்.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க இந்த விவகாரத்தை கையாள இதர அமைச்சுக்களுடன் தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சு அணுக்கமாக ஒத்துழைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.


