
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடன் கெடா மஇகா பார்க்க முடியும் என பாஸ் ஆதரவு பேரவையின் தேசிய தலைவர் நா. பாலசுப்ரமணியம் நம்பிக்கை தெரிவித்தார்.
அடுத்த பொது தேர்தலில் பெரிக்காத்தானுடன் ஒத்துழைக்க கெடா மஇகா எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்க ஒன்று என்றார் அவர்.
கெடா மந்திரி பெசார் சானுசி நோர் தலைமையிலான கெடா பெரிக்காத்தான் அரசாங்கம் அம்மாநில மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பாக்காத்தான் ஹராப்பான் ஆட்சி செய்யும் இதர மாநிலங்களை ஒப்பிடுகையில், பெரிக்காத்தான் ஆட்சி செய்யும் கெடா மாநிலத்தில், இந்திய சமூகத்தை பாதிக்கும் பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை என அவர் சுட்டிக் காட்டினார்.
பெரிக்காத்தான் நிர்வாகம் அனைத்து இனங்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது என்பதை இது காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த உண்மையின் காரணமாக தான் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடன் ஒத்துழைக்க கெடா மஇகா முடிவு செய்துள்ளதாக அவர் கோடிக் காட்டினார்.
நேற்று முன்தினம்
மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கலந்து கொண்ட கெடா மஇகா பேராளர்கள் மாநாட்டில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும் இந்த தீர்மானம் மீதான இறுதி முடிவுக்கு கட்சியின் மத்திய செயலவைக்கு கொண்டு செல்லப்படும் என கெடா மஇகா தலைவர் எஸ்கே சுரேஷ் கூறியுள்ளார்.
கடந்த 2020 மே மாதம் முதல் பாஸ் தேர்தல் இயக்குனர் சானுசி நோர் கெடா மாநில அரசாங்கத்திற்கு தலைமையேற்று வருகிறார்.
பாக்காத்தான் ஹராப்பானுடன் கூட்டு சேர்ந்துள்ள தேசிய முன்னணியின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை தொடர்ந்து கெடா மஇகா இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாக பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
பெரிக்காத்தானுடன் ஒத்துழைக்க மஇகா விரும்பினால் அதை தாங்கள் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2018 பொது தேர்தலுக்குப் பிறகு பாஸ் கட்சியுடன் மஇகா ஒத்துழைத்துள்ளதால், பாஸ் கட்சியின் கொள்கைகள் குறித்து அக்கட்சிக்கு போதுமான அனுபவம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த ஒத்துழைப்பு தொடர்ந்தால் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு குறிப்பாக இந்திய சமூகத்தில் மலாய் காரர்கள் அல்லாதவர்களின் ஆதரவு அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மஇகாவிற்கு அம்னோ ஆதரவு வழங்குவதை குறைத்துக் கொண்டதால் தேசிய முன்னணியில் அக்கட்சியின் செல்வாக்கு சரிந்து விட்டதாக அவர் தெரிவித்தார்.


