
செப்பாங் ஆக 12
உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் நகருக்கு நேரடி விமான சேவையை தொடங்குகிறது.
எதிர்வரும் 14 நவம்பர் 2025 கோலாலம்பூரிலிருந்து இஸ்தான்புல் நகருக்கு ஏர் ஆசியா எக்ஸ் தனது முதல் விமான சேவையை தொடங்குகிறது.இஸ்தான்புல் நகருக்கு வாரத்துக்கு 4 விமான சேவைகளை மேற்கொள்ள ஏர் ஆசியா எக்ஸ் திட்டமிட்டுள்ளது.
ஐரோப்பாவுடன் தென்கிழக்கு ஆசியாவை இணைக்கும் முக்கிய நுழைவாயில் இஸ்தான்புல் நகர் என்பது குறிப்பிடத்தக்கது.இஸ்தான்புல் பயணிகள் ஏர் ஆசியாவின் 130 நகரங்களுக்கான சேவைகளை பயன்படுத்திக் கொள்ள இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
துருக்கியின் சபிஹா கோக்சென் அனைத்துலக விமான நிலையம் 117 அனைத்துலக நகரங்களை இணைக்கும் முக்கிய விமான மையமாகும்.இதனிடையே ‘எங்களின் அதிகமான பயணிகளுக்கு இஸ்தான்புல் ஒரு கனவு நகரமாக இருந்து வந்தது’ என ஏர் ஆசியா எக்ஸ் தலைமை செயல்முறை அதிகாரி பென்ஜாமின் இஸ்மாயில் கூறினார்.
எங்களின் எழுச்சியான பயணத்திற்கு இது மற்றொரு மைல்கள் என அவர் குறிப்பிட்டார்.

இரு கண்டங்கள் மீது அமைக்கப்பட்ட உலகின் முதல் நகரம் என்பதால், இந்த புதிய விமான சேவையை மேற்கொள்வதில் தாங்கள் பெருமை கொள்வதாக அவர் சுட்டிக் காட்டினார்.இந்த புதிய வழித்தடம் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்கவும் உலகளாவிய பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரவும் வழி வகுக்கும் என அவர் சொன்னார்.இந்த புதிய வழித்தடம் உம்ரா பயணிகளுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஐரோப்பாவை சேர்ந்த பயணிகள் தென்கிழக்கு ஆசிய நகர்களை சுற்றி பார்க்க எளிதான வாய்ப்பாக இந்த புதிய சேவை அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே இந்த புதிய விமான சேவை இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக மற்றும் தூதரக உறவுகளை அதிகரிக்கும் என மலேசியாவிற்கான துருக்கி குடியரசின் தூதர் எமிர் சாலிம் யுக்செல் கூறினார்.இந்த புதிய விமான சேவையின் மூலம் கல்வி, புத்தாக்கம் மற்றும் தொழில்துறை கூட்டு முயற்சிகள் அதிகரிக்கச் செய்ய வாய்ப்பாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இரு நாட்டு மக்களுக்கிடையே தங்களின் கலை மற்றும் கலாச்சாரங்களை வலுப்படுத்த வாய்ப்பாக அமையும் என்றார் அவர்.இதனிடையே ஏர் ஆசியாவின் இந்த நேரடி விமான சேவை மிகவும் பாராட்டக்கூடிய ஒன்று என மலேசியா சுற்றுலா துறையின் தலைமைய இயக்குனர் டத்தோ மனோகரன் பெரியசாமி கூறினார்.

2026 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு என்பதால், சரியான தருணத்தில் ஏர் ஆசியா இந்த புதிய சேவையை தொடங்குவது பாராட்டத்தக்க ஒன்று என அவர் தெரிவித்தார்.மலேசியாவின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு ஏர் ஆசியா பெரும் பங்காற்றுவதாக அவர் தெரிவித்தார்.இது போன்ற புதிய நகரங்களுக்கு ஏர் ஆசியா தொடர்ந்து சேவையை மேற்கொள்ள வேண்டும் என அவர் சொன்னார்.
இந்த புதிய விமான சேவைக்கான ஊக்குவிப்பு கட்டணமாக அனைத்தும் அடங்கிய ஒரு வழி பயண கட்டணம் வெ 499-லிருந்து தொடங்குகிறது.


