
ஆம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மலேசிய கலைத்துறையின் மூத்த நகைச்சுவை நடிகரான சத்யாவை (வயது 61), தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
கடந்த திங்கட்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சத்யா, கால் விரல் பகுதியில் நடந்த சிறிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு இன்று (ஆகஸ்ட் 4) வீடு திரும்பினார். தொடர்ந்து சில கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
“நான் இன்னும் நலமாக இருக்கிறேன். இன்னும் சில கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். முதலில் வீடு திரும்பியதும் எனது பேரக்குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும்” என நகைச்சுவையாக பேசினார்.
கடந்த வருடம் ஜூலை மாதம், அவர் கோலாலும்பூர் மருத்துவமனையில் திடீர் பக்கவாதத்தால் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
“தனது கலைத்துறை பணியில் தற்போது தற்காலிகமாக ஈடுபடாமல் இருந்தாலும், மன உறுதியோடு சத்யா இருக்கிறார். விரைவில் அவர் நலம் பெற்று வர நாம் அனைவரும் பிராத்திப்போம்.” என கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ தெரிவித்தார்.
மலேசிய தேசியத் திரைப்பட நிறுவனமான (பினாஸ்) ஏற்பாடு செய்த கலைஞர்களுக்கான நலத்திட்ட வருகையின் கீழ் சத்யாவுக்கு நலத்தொகையும், பழவகைகள் கொண்ட கூடை ஒன்றையும் துணையமைச்சர் வழங்கினார்.

இந்த நலத்திட்டத்திலிருந்து உதவி பெற விரும்பும் மலேசிய கலைஞர்கள், பினாஸ் நலக்குழுவை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என தியோ தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “கடந்த ஜூலை 31 வரை, பினாஸ் எதிர்பார்த்த 100 இலக்கைத் தாண்டி, 112 கலைஞர்களுக்கு இந்த சிறப்பு உதவியை வழங்கியுள்ளது,” என்றார்.
முன்னதாக, கடந்த டிசம்பர் 26ஆம் தேதி, துணையமைச்சர் தலைநகரிலுள்ள நடிகர் சத்யாவின் வீட்டில் நேரில் சந்தித்து, சில உதவிகளை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


